பேரன்பே வாழ்வின் ஆணிவேர் என்பதை பறைசாற்றும் மற்றொரு மெல்லிய படைப்பு கிடா
தாத்தா பூ ராமுவிடம் ஆசையாக தீபாவளிக்கு ஒரு புது ட்ரஸ் கேட்கிறான் பேரன் தீபன். பொருளாதரச் சிக்கல் கொண்ட தாத்தா பேரனின் ஆசைக்காக..தான் ஆசையாக வளர்த்த கிடாவை விற்க முற்படுகிறார். அந்தக் கிடாவைக் கொண்டே தன் மட்டன் கடையை துவங்க நினைக்கிறார் காளிவெங்கட். இந்நிலையில் கிடா தொலைந்து போகிறது. பேரனும் தாத்தாவும் கிடாவைத் தேடுகிறார்கள். கிடா கிடைத்ததா? காளிவெங்கட் லட்சியம் என்னானது? யாருக்கும் வலிக்காமல் படம் எப்படு நிறைவை எட்டுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை
மறைந்த பூ ராமு மிகச்சிறந்த உடல்மொழியால் இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.. இனியும் வாழ்வார்! அருமையான நடிப்பு அவரது நடிப்பு! மாஸ்டர் தீபன் மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். அவரின் பாடிலாங்வேஜ் படத்தின் சூழலை சரியாக பிரதிபலிக்கிறது. தீபனின் ஆச்சியாக வரும் மீனாம்மாள் அட்டகாசமான தேர்வு. சிறு சிறு உடல்மொழி மற்றும் வசனங்களில் கூர்மையாக கவனிக்க வைக்கிறார். காளிவெங்கட் நல்லா நடிக்கவில்லை என்றால் தானே ஆச்சர்யம்..மனிதர் பின்னியிருக்கிறார். நடிகர்களாக திரையில் தோன்றிய அனைவருமே தங்கள் தங்கள் பங்களிப்பை திறம்பட செய்துள்ளனர்.
எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தியைக் கொண்டுவந்துள்ளார். மதுரை யானை மலையின் பின்புலத்தை யானை பலம் கொண்டு தன் கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார். படத்தில் தொனிக்கும் ஈரமும் ஆழமும் தன் இசையில் வரவேண்டும் என உழைத்துள்ளார் இசை அமைப்பாளர் தீசன். ஸ்ரவந்தி ரவி, கிஷோர் தயாரிப்பில் இந்தக் கிடா பேர் சொல்லும் படமாக வந்துள்ளது
இளகிய இதயமுள்ள மனிதர்களால் தான் இந்த மண்ணில் இன்னும் ஈரம் காயாமல் நல்லவையும் விளைகிறது. எடுத்துச் செல்ல எதுவும் இல்லை..விட்டுச் செல்ல அன்பு இருக்கிறது. இதுதான் வாழ்க்கை என்பதை நேர்பட அழகான திரைமொழியில் பேசியிருக்கும் இந்தக் கிடா தீபாவளி விருந்து அல்ல… தித்திக்கும் மருந்து
3.75/5
-மு ஜெகன் கவிராஜ்