Tamil Movie Ads News and Videos Portal

ரெய்டு- விமர்சனம்

“உன் தலையெழுத்தை பிரம்மன் பென்ல எழுதியிருப்பான். நான் கன்ல எழுதியிருக்கேன்” ரவுடி ஒருவரைப் பார்த்து போலீஸ் ஆன விக்ரம் பிரபு சொல்லும் வசனம் இது. இந்த வசனத்தை வைத்தே படத்தின் கதை என்ன என்பதை யூகிக்க முடியும். இப்படியான வெடிச் சிரிப்பு வசனங்களை இயக்குநர் முத்தையா எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் கடுப்பு

ரவுடிகளை அழித்தொழிக்கும் காவலதிகாரி விக்ரம் பிரபு. அந்த ரவுடிகளால் அவரின் அக/புற வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் படம் பார்க்கும் ஆடியன்ஸும் சோதிக்கப்படுகிறார்கள். இவ்வளவே கதை

நடிப்புன்னா என்ன? என்று கேட்கும் அளவில் இல்லாமல் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு..தீபாவளி ஆபர் போல வந்து ஆசைகாட்டிவிட்டுச் செல்கிறார் நமது ஸ்ரீதிவ்யா. ஏனைய ரவுடிகள், போலிஸ்கள் எல்லாம் ஓகே ரகம்

அதிரடி பாடல்கள், சரவெடி பி.ஜி.எம் என இசை அமைப்பாளர் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். But.. “இங்க இவ்ளோ சீன்லாம் தேவையில்ல ப்ரோ” என்ற ரேஞ்சில் தான் கதை நகர்கிறது. ஒளிப்பதிவும் ஓகே ரகமாகவே இருக்கிறது

கதையை விட்ட இடத்தில் அப்படியே விட்டுட்டு வேறோர் கதைக்குச் சென்று, பின் விட்ட கதைக்கே திரும்பி வருவது என சுழற்சி முறை கதை சொல்லலை இயக்குநர் கையாண்டுள்ளார். நாம் ஏற்கனவே நொந்துள்ள நிலைமையில் இந்த கதை சொல்லல் மேலும் நம்மை நொங்கெடுக்கிறது என்பது தனிக்கதை

வெறும் வசனங்களால் படம் நிரம்பி வழிவதால் கோவா பாடல் காட்சி ஒன்றை மட்டும் ரசித்து விட்டு வரலாம். மற்றபடி ரெய்டு அலர்ஜி!
2/5
-மு.ஜெகன் கவிராஜ்