திரில்லர் ரூட்டில் பயணித்து பக்காவாக செண்டிமெண்ட் End கொடுக்கிறது இந்த சைரன்
14 வருடம் சிறையில் இருக்கும் ஜெயம்ரவி 14 நாட்கள் பரோலில் வெளியில் வருகிறார். அவர் வந்த பின் இரு முக்கியமான கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகளுக்கான காரணி யார் என கண்டுபிடிக்க முயல்கிறார் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ். ஜெயம் ரவி சிறைக்குப் போனதிற்கான பின்னணி என்ன என்பதும், அவரின் பரோல் நாட்களில் நடைபெற்ற கொலைகளுக்கான பின்னணி என்ன என்பதும் தான் படத்தின் கதையாக விரிகிறது
படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை உடல்மொழியில் சிறு மாற்றமும் இல்லாமல் அசத்தலாக அந்தக் கேரக்டருக்குள்ளே புகுந்துள்ளார் ஜெயம் ரவி. அவரின் முகத்தில் வெளிப்படும் பாசமும், இயலாமையும், காத்து வைத்திருந்த பகையும் அசலாகவே வெளிப்படுகிறது. படத்தை நாம் நெஞ்சுக்கூட்டில் வைத்திருக்க பெருங்காரணம் ஜெயம் ரவியின் அருமையான நடிப்பு தான். அவருக்கு சற்றும் சளைக்காமல் கெத்து காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அவரின் காக்கிச்சட்டை போர்ஷன் எல்லாமே மாஸ் மெட்டிரியல். படத்தில் ஆங்காங்கே தென்படும் இயல்பான நகைச்சுவைக்கு முழுக்காரணம் யோகிபாபு. மேலும் கிடைத்த சின்ன கேப்பில் தானொரு சிறந்த குணச்சித்திர நடிகனும் கூட என ஸ்கோர் செய்துவிடுகிறார் யோகி. சமுத்திரக்கனி, அழகம் பெருமாள் இருவரும் தனித்துத் தெரிகிறார்கள்.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் பின்னியுள்ளார். அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகளின் உருக்கத்தை நமக்கு நெருக்கமாக கொடுத்துள்ளார் சாம்.சி.எஸ். பாடல்களில் ஜி.வி பிரகாஷ் தன் ஜீவனைக் கொடுத்துள்ளார். முருகன் மந்திரம் வரிகளில் உள்ள அடி ஆத்தி என்ற பாடல் ஓசை நயமாகவும் கருத்தாழத்தோடும் அமைந்துள்ளது. “சாஸ்திரத்தை தூக்கிப்போட்டு வேலையப்பாரு” என்ற வரிகள் மூலம் முருகன் மந்திரம் சின்ன கேப்-ல் கூட பெரிய ஆட்டம் ஆடியுள்ளார். ஒளிப்பதிவாளர் தனது வேலையில் துளியும் குறைவின்றி உழைத்துள்ளார். நைட் காட்சிகளில் அவரது லைட்டிங் சென்ஸ் அட போட வைக்கிறது
சாலையில் நாம் செல்லும் போது சைரன் ஒலி கேட்டால் ஒரு நிமிடமேனும் நம் மனம் வேறோர் நிலைக்குச் சென்று மீளும். அப்படித்தான் இந்தப்படமும் நம் மனதை எதோ செய்கிறது. “நல்லவனை கூட நல்லவனா நடிக்க வைக்கிறீங்களேடா” போன்ற வசனங்கள் படத்தின் ஸ்ட்ராங் பாயிண்ட்களில் ஒன்று. ஒவ்வொரு சிறைக் கைதிக்குப் பின்னாலும் மிகப்பெரிய வலியும் வாழ்வும் உண்டு என்பதையும், ஒற்றை மகளை மட்டும் கொண்ட தகப்பனுக்கு மகளன்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் சைரன் நம் மனதிற்குள் சைலன்ட்-ஆக உணர்த்துகிறது.
விறுவிறு திரைக்கதை, பரபர மேக்கிங் என நம் கவனத்தை சிதற விடாத இந்த சைரனுக்கு நிச்சயம் வழி அமைத்துக் கொடுக்கலாம்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்