பூமியுள்ள காலம் வரை சாமி சாட்சியா சொந்தபந்தமெல்லாம் ஒன்னா இருக்கணும்னு சொல்ற படம் வீராயி மக்கள்
ஊரின் முக்கியப்புள்ளி மருதமுத்து குடும்பத்திற்குள் அன்பு எனும் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. தென்றலுக்குப் பின் புயல் உண்டுல்லவா? மருதமுத்து முதல் தம்பியின் மனைவி வழியாக வீட்டிற்குள் வம்பு நுழைகிறது. அந்த வம்பு இருக்கிற அன்பை எல்லாம் பின்னுக்குத் தள்ளுகிறது. துணையாக இருந்த உறவுகள் எல்லாம் பகையாக மாறி நிற்கிறார்கள். முடிவில் குடும்பம் என்னானது? எப்படி ஒன்னானது? என்பதே படத்தின் கதை
கதையின் நாயகன் சுரேஷ் நந்தா கூடுமானவரை நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். வேல.ராமமூர்த்தி தனது கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார். ஹீரோயின் நடிப்பு எதார்த்தம் மீறாமல் அமைந்துள்ளது சிறப்பு. சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்
கிராமத்திற்கு ஏற்ற ஒலி அமைப்பை ஏற்படுத்தி இசை அமைத்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவில் கிராமத்து அழகியல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
வழக்கமான கதை பழக்கமான திரைக்கதை என்றாலும் படம் முடியும் வரை ஓரளவு என்கேஜிங்காகவே இருக்கிறது. சுலபமாக யூகிக்க கூடிய காட்சிகளை கூடுதலாக சுவாரஸ்யப் படுத்தியிருந்தால் வீராயி மக்கள் செம்மயாக அமைந்திருக்கும். இருப்பினும் முதலுக்கு மோசமில்லை
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்