Tamil Movie Ads News and Videos Portal

போகுமிடம் வெகுதூரமில்லை- விமர்சனம்

சென்னை டூ நெல்லை ஒரு எமோஷ்னல் பயணமே போகுமிடம் வெகுதூரமில்லை

ஹீரோ விமல் தன் மனைவியை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்க்கிறார். அதற்கு பணம் நிறைய தேவைப்படுகிறது. அந்தப் பணத்தேவைக்காக, சென்னை மருத்துவமனையில் இருந்து, இறந்த ஒருவரின் சடலத்தை ஆம்புலன்ஸில் திருநெல்வேலிக்கு கொண்டு செல்கிறார். இறந்தவருக்கு இரு மனைவிகள். இரு மனைவிகளின் மகன்களும் சடலத்தின் வருகைக்காக போட்டி போட்டு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆம்புலன்ஸில் விமலோடு கருணாஸும் பயணிக்கிறார். கூத்துக்கலைஞனான கருணாஸின் செயல்களும் அதன் பின்னாலுள்ள விளைவுகளும் விமலின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பதாக படத்தின் கதை பயணிக்கிறது

கதாநாயகனாக விமல் நன்றாக நடித்துள்ளார். கதையின் நாயகனாக கருணாஸ் அமர்க்களப்படுத்தியுள்ளார். படம் பார்க்கும் ரசிகனுக்கு சில இடங்களில் கண்ணீர் முட்டுகிறது என்றால் அதற்கு கருணாஸின் நடிப்பே பிரதான காரணம். படத்தில் பங்கேற்றுள்ள இதர நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர்

முழுக்க முழுக்க சாலையிலே பயணிக்கும் கதை என்பதால் கேமராவால் முடிந்தளவு வித்தியாசத்தைக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். படத்தில் ஒரு பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசையும் குறை சொல்வதற்கில்லை

ஒரு live drama படமாக துவங்கும் படம் போகப்போக எமோஷ்னலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. “கை நீட்டி உதவின்னு கேட்குறாங்க. நீ பாட்டுக்கு வந்துட்டியேப்பா” என்ற கருணாஸின் வசனத்தில் இருந்தே படம் தாங்கி நிற்கும் அறத்தை உணர முடிகிறது. சக உயிருக்கு ஒன்றென்றால் உடனே துடிக்கும் உயிராக மனிதன் இருக்கவேண்டும் என்ற படத்தின் முடிவு ‘அட’ சொல்ல வைக்கிறது. மேக்கிங்-ல் மட்டும் இன்னும் சிரமேற்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பான அனுபவம் நமக்கு கிட்டியிருக்கும். நல்ல சினிமாக்களைத் தேடி நாம் போகுமிடம் வெகுதூரத்தில் இல்லை. அருகிலே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது போகுமிடம் வெகுதூரமில்லை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்