ஒடுக்கப்பட்டவர்கள் வலிகளை பதிவு செய்யும் மற்றொரு படம்
கந்தவர்வ கோட்டை பஞ்சாயத்தின் நிரந்தர தலைவராக வலம் வருகிறார் பாலாஜி சக்திவேல். அவருக்கு வாழ்நாள் அடிமை போல் அவரது காலடியிலே கிடக்கிறார் சசிகுமார். கந்தர்வகோட்டை தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை பஞ்சாயத்து தலைவராக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொந்தளிக்கும் பாலாஜி சக்திவேல் தனது அடிமை போல் வாழும் சசிகுமாரை பஞ்சாயத்து தலைவராக்குகிறார். ஆனால் நிழல் தலைவராக அவரே இருக்கிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் சசிகுமாருக்கு ஒரு சமூகநீதி உரிமைக்காக பஞ்சாயத்து தலைவராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் ஆதிக்கச் சாதி வீறுகொண்டு எழுகிறது. அதன்பின் நடக்கும் களேபரங்கள் தான் படத்தின் கதை
கதையின் நாயகனாக சசிகுமார், நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஸ்ருதி பெரியசாமி வெகு இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். பாலாஜி சக்திவேல் ஆதிக்கச் சாதியினரின் உடல்மொழியை அப்படியே தனக்குள் பிரதிபலித்துள்ளார். GM.குமார் தள்ளாட கூட முடியாத நிலையிலும் சாதிவெறியைத் தூக்கிப்பிடிக்கும் காட்சிகளில் அட்டகாசம் செய்துள்ளார். சிறிது நேரம் என்றாலும் சமுத்திரக்கனி வரும் காட்சிகள் எனர்ஜியாக இருக்கிறது
ஜிப்ரானின் இசையை படத்தை பெரிதாக காப்பாற்றியுள்ளது. மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கந்தர்வகோட்டையின் அழகை அழகாக படம் பிடித்துள்ளார்
நந்தனாரின் வரலாற்றில் ஒட்டியிருக்கும் தீண்டாமையை இந்த நந்தனில் புகுத்தியுள்ளார் இயக்குநர். படத்தில் சில இடங்கள் செயற்கையாக தெரிந்தாலும், படம் பேசும் நிஜம் நம்மைச் சுடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்தாலும், அந்த அதிகாரத்திற்கான மரியாதையை இந்தச் சமூகம் தர மறுக்கிறது என்பதை வலியோடு பதிவு செய்துள்ளது நந்தன். இன்னும் பல கமர்சியல் தன்மையோடு இந்த நந்தன் வந்திருக்கலாம். குறைகள் மறந்து வரவேற்க வேண்டிய படம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்