கமர்சியலை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க கருத்தியலோடு களம் கண்டுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்
சென்ற பாகத்தில் பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதி கைது செய்யப்படுவார். இந்தப்பாகத்தில் அவரைக் காட்டிலிருந்து சேத்தன் தலைமையிலான போலீஸ் குழு அழைத்துச் செல்கிறது. அந்தப் பயணத்தில் ‘விஜய்சேதுபதி தான் ஒரு போராளியாக எப்படி மாறினேன்’ என்பதை கதையாகச் சொல்கிறார். அந்தக் கதைதான் வெற்றிமாறனின் திரைக்கதையாக விரிகிறது
தன் கரியரை நடிப்பளவில் ஸ்டெடி பண்ண விரும்புவர்கள் நிச்சயமாக விஜய்சேதுபதியிடம் ஐடியாஸ் கேட்கலாம். குரல்மொழி முதல் உடல்மொழி வரை வேறலெவல் நடிப்பைக் கொடுத்துள்ளார். மஞ்சுவாரியர் தரமான நடிப்பால் அவரின் கேரக்டருக்கு கரம் கொடுத்துள்ளார். வாழும் வரை கம்யூனிசம் என வாழும் கேரக்டரோடு ஒட்டிப்போயிள்ளார் நடிகர் கிஷோர். வெல்டன் தோழர். சேத்தன் சென்றபாகம் போலவே இந்தப்பாகத்திலும் அசத்தியுள்ளார். கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல், கெளதம் மேனென், சிலகாட்சிகளிலே வரும் அனுராக் காஷ்யப், முத்தாய்பாக சூரி. அனைவருமே கொடுத்த கேரக்டரை. உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர். சூரிக்கு படத்தில் குறைவான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. அதை மிக நிறைவாகச் செய்துள்ளார்
வேல்ராஜின் கேமரா சிலபல சமரசங்களைத் தாண்டி விஷுவலில் ஸ்கோர் செய்கிறது. டப்பிங்கில் மிகப்பெரிய குழப்பமும் சமரசமும் நடந்திருப்பது படமெங்கும் தெரிகிறது. சிஜி டீம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ராமரின் எடிட்டிங் டீம் மரண உழைப்பைக் கொடுத்துள்ளனர். அது கண்கூடாக தெரிகிறது. இசைஞானியின் இசையில் பாடல்கள் மனதைத் தொட்ட அளவிற்கு பின்னணி இசை தொடவில்லை.
இந்தப்படமெங்கும் பெரும் உரையாடல் நிகழ்கிறது. எல்லாக் கேரக்டர்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசுகிற விசயங்கள் மிகவும் சரியானவை என்பதால் நம்மால் வசன போர்ஷனைப் புறந்தள்ள முடியவில்லை. உழைக்கும் மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்ததில் கம்யூனிச, திராவிட இயக்கத்தவர்களின் தியாகத்தையும் உழைப்பையும் பலமான ஆதாரங்களோடு படம் பேசுகிறது. கம்யூனிச சிந்தாத்தைத் துணைகொண்டபடியே, அதில் வன்முறையை கலக்கும் விஜய்சேதுபயின் மாற்றம் அதிர்ச்சியை அளித்தாலும், முடிவில் எதற்கும் வன்முறை தீர்வல்ல என்று முடித்தது சிறப்பான ஒன்று
வெற்றிமாறன் எவ்வளவு தான் கருத்தியலை, அரசியலை தன் படங்களில் பேசினாலும், எளிய ரசிகனையும் ஈர்க்குமபடி ஒரு கமர்சியல் மீட்டரை தன் படங்களில் வைத்திருப்பார். பஞ்சமி நிலம் பற்றிப் பேசிய அசுரன் படத்தை கூட, அட்டகாசமான திரைக்கதையால் ஒரு பாட்ஷா போல நகர்த்திச் சென்றிருப்பார். இந்த விடுதலை2-வில் அந்த மீட்டர் இல்லை. அதனால் எளிய ரசிகனுக்கு இந்தப்படம் எந்தளவில் கனெக்ட் ஆகும் எனத் தெரியவில்லை. But 25ஆண்டுகள் கழித்துக் கூட கம்யூனிச தத்துவத்தைப் பேசிய படங்களைத் தேடினால் அதில் முதல் இடத்தில் விடுதலை2 தான் இருக்கும். அதில் துளிகூட டவுட் இல்லை
4/5
-வெண்பா தமிழ்