“மதுக்கடை வாசல் மறந்து வாருங்கள். புதுப்புது வாசல்கள் நிறைய இருக்கின்றன” என்று அழுத்தமாக போதிக்கிறார் இந்த பாட்டல் ராதா
நாயகன் குரு சோமசுந்தரம் மகா குடிகாரர். அவரது விடாத குடியால் அவரோடு குடித்தனம் நடத்தும் மனைவி சஞ்சனா, மற்றும் குழந்தைகள் பெரும் சிரமம் அனுபவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் குரு சோமசுந்தரத்தை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் அவரது மனைவி. மறுவாழ்வு மையத்திறகுச் சென்றபின் அவர் வாழ்வு என்னவாக மாறுகிறது? என்பதாக படத்தின் கதை விரிகிறது
குரு சோமசுந்தரம் ஒரு அக்மார்க் குடிகாரனை தன் உடலுக்குள் புகுத்தியுள்ளார். சில இடங்களில் இயல்பை மீறியிருந்தாலும், தீபாவளி பலகாரத்தை அள்ளிக்கொண்டு ஓடி வரும் காட்சியில் அசத்திவிடுகிறார். குரு சோமசுந்தரத்தை விடவும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சஞ்சனா. இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு மரணத்தை ஏற்கத்துணியும் அந்த ஒரு காட்சியும், மறு வாழ்வு மையத்தில் கணவனைத் தேடிவரும் காட்சியும் சஞ்சனாவின் நடிப்புத் திறனுக்கான நற்சான்று. ஜான் விஜய் மறுவாழ்வு மையத்தை நிர்வகிப்பவராக வந்து பட்டையக் கிளப்பியுள்ளார். பாரி இளவழகன் உள்பட அத்தனை நடிகர்களும் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளனர்
படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையோடு இயல்பாக ஒத்துப்போகின்றன. பின்னணி இசையும் திரைக்கதையின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. ஒளிப்பதிவாளர் தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.
‘குடி உயிரைக்கொல்லும்’ என்ற பாட்டல் வாசகத்தோடு அரசின் கடமை முடிந்து விடுகிறது. அதன் நிஜத்தை வலி மிகுந்த படைப்பாக மாற்றித்தந்துள்ளார் இயக்குநர். படத்தின் கதையில் பிரச்சாரம் அதிகம் இருந்தாலும், அதில் அற்புதமான கலை நேர்த்தியைச் சேர்த்துள்ளார். அதனால் படம் எந்த இடத்திலும் தொய்வே அடையவில்லை. நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படத்தில் தேக்கம் என்பதே இல்லை என்பதால் இது ஆக்கப்பூர்வமான வெற்றியை அடையவேண்டும்..அப்படி அடைந்தால் நிறைய தாய்மார்களின் கண்ணீருக்கும் கலக்கத்திற்கும் ஒரு மருந்தாக இருக்கும். ஏனெனில் ஏழை எளிய ஆண்களின் குடியால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். மறுபடியும் ஒரு அட்வைஸ், “மதுக்கடை வாசல் மறந்து வாருங்கள்; புதுப்புது வாசல்கள் நிறைய இருக்கின்றன”
பாட்டல் ராதா- டோட்டல் பாஸ்
4/5
-வெண்பா தமிழ்