“வாழ்க்கை என்பது தேங்கி நிற்பதல்ல..கடந்து போவது” இதுதான் மனித வாழ்வின் எதார்த்தம். ‘எதுவும் கடந்து போகும்’ என்பதே வாழ்வின் விதி. இருப்பினும் சிலவற்றை கடந்து போக முடியும்.. மறந்து போக முடியாதல்லவா? அப்படியான ஒரு மறக்க முடியாத பயணத்தை விவரிக்க முயன்றுள்ளான் இந்த ஆலன்
காசியில் ஆன்மிக தேடலுடன் தாடியோடு திரிகிறார் ஹீரோ வெற்றி. அவர் மனதை உற்றுணரும் ஹரிஷ் பேரொடி வெற்றிக்குள் இருக்கும் ஒரு எழுத்தாளரை காண்கிறார். அவரை எழுத்தோடு வாழப்பணிக்கிறார். வெற்றியும் லெளகீக வாழ்விற்கு வருகிறார். லெளகீகம் ஒரு காதலை வழங்குகிறது. மேலும் சில கவலைகளையும் கொடுக்கிறது. அந்தக் கவலை நிறைந்த காலத்தை அவர் எப்படி கடந்து வந்தார்? பின்னர் அவரின் கடந்தகால வாழ்வு என்ன? என்பதாக படத்தின் கதை விரிகிறது
தியாகுவாக வெற்றி நடித்துள்ளார். எமோஷ்னல் மற்றும் காதல் காட்சிகளில் இன்னுமே அவர் ஸ்கோர் செய்திருக்கலாம். மதுரா ஜெர்மனி பெண்ணாக வந்து மனதில் நிறைகிறார். அனு சிதாரா குறைந்த நேரமே வந்தாலும் அவரது கேரக்டர் வடிவம் நன்றாக எழுதப்பட்டுள்ளது..அவரும் நன்றாக நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, அருவி மதன், கருணாகரன் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் படி நடிப்பவர்கள் தான், கேரக்டர்ஸ் தான் சொல்லிக்கொள்ளும் படி இல்லை
படத்தில் இசைக்கு நிறைய வேலை. உணர்வு சார்ந்த கதைகளுக்கு இசை தான் முக்கியம். அதை உணர்ந்து ஓரளவு இசையால் படத்தை காப்பாற்ற முயன்றுள்ளார் இசை அமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. வின்தன் ஸ்டாலின் தனது ஒளிப்பதிவுத் திறத்தை நன்றாக நிறுவியுள்ளார். காசியில் எடுக்கப்பட்டுள்ள ஷாட்ஸ் எல்லாம் சிறப்பு
வாழ்வின் அடியாழத்தைத் தொடக்கூடிய கதை. நிச்சயமாக பெரும் தத்துவத்தை அழகியலோடு, கமர்சியலும் கலந்து சொல்லிருக்கலாம். இயக்குநர் ஸ்டேட்ஜிங்கில் நிறையவே தடுமாறியுள்ளார். உணர்வுகள் எங்குமே கோர்வையாகச் சொல்லப்படவில்லை..அதனாலே படம் பெரும் சோர்வை தருகிறது. கதையாக ஈர்த்த ஆலன்,காட்சிகளாகவும் ஈர்த்திருந்தால், மறக்க முடியாத படமாக மாறியிருக்கும்
2.75/5
-தமிழ் வெண்பா