திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த இன்ப வடு மறைவதற்குள் தனுஷ் இரு படங்களை (நானே வருவேன், வாத்தி) கொடுத்து விட்டார். அதேபோல் அதன் இயக்குநர் மித்ரன் ஜவஹரும் ஒரு படம் கொடுத்திருக்கிறார். இந்த அரியவன் என்னவொரு வேகமாக வந்துள்ளார்.
ஹீரோ இஷான் தன் காதலியின் தோழி ஒரு ஆபத்தில் சிக்குவதைக் கண்டு அவரைக் காப்பாற்றச் செல்கிறார். சிக்கியிருப்பது ஒரு பெண் மட்டுமல்ல என்பது தெரிந்தவுடன் இஷான் எடுக்கும் அரிய அவதாரம் தான் மொத்தபடமும்.
அரியவன் தான் ஹீரோ இஷானுக்கு அறிமுகப் படம் என்றால் யாரும் நம்புவது கடினம். சில காட்சிகளில் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. ஹீரோயின் கேரக்டரை நன்றாக ரசிக்க முடிகிறது. வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தனது அக்மார்க் உடல்மொழியாலும் முக முழியாலும் அதகளப்படுத்துகிறார். மேலும் படத்தில் வரும் ஏனைய கேரக்டர்கள் யாவரும் எந்தக் குறையுமின்றி நடித்துள்ளனர்
பின்னணி இசையில் நல்ல துல்லியம் வாய்த்துள்ளது. ஒளிப்பதிவாளரும் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். டெக்னிக்கல் டீமை நன்றாக வேலை வாங்கி தான் நினைத்த மேக்கிங்கை திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
முன்பாதியில் போடப்படும் திரைக்கதை அஸ்திவாரத்தில் இன்னும் உறுதித்தன்மையை கூட்டியிருக்கலாம். பின்பாதி மின்னலென பாய்வதால் படம் முடியும் போது நமக்கு ஒரு நிறைவுத்தன்மை கிடைத்துவிடுகிறது. ஆதலால் அரியவனை காணலாம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்