திருடனான தாத்தாவின் தொடர்ச்சியாக இல்லாமல் வாழ முயற்சிக்கும் ஒரு ஹீரோவின் கதை
வானிலிருந்து ஒரு மின்கல் விழுகிறது. அந்த மின்கல்லை எடுத்து, ஒரு அதிசய விளக்கைச் செய்கிறார் ஒரு ராஜா. அந்த மின்கல் ஹீரோ டொவினோ தாமஸ் ஊரைச்சேர்ந்த மின்கல் என்பதால், மின்கல்லால் ஆன அந்த விளக்கை கைப்பற்றி தன் ஊருக்கு கொண்டு வருகிறார் டொவினோ. சில தலைமுறை சென்றபிறகு, கதை . 80 கால கட்டத்திற்கு வருகிறது. அக்கால கட்டத்தில் மெக்கானிக் முதல் சகல வேலைகள் தெரிந்தவராக டொவினோ தாமஸ் இருக்கிறார். அவர் மீது அவரது தாத்தாவின் திருட்டுப்பழியும், சாதிய ஒடுக்குமுறையும் நிகழ்த்தப்படுகிறது. இந்நிலையில் ஊரின் தலைவர் மகளும் டொவினோ தாமஸும் காதலிக்கிறார்கள். மேலும் அந்த ‘அற்புத விளக்கை’ கைப்பற்ற ராஜாவின் தொன்று தொட்ட வாரிசான ஹரிஷ் உத்தமன் வருகிறார். அவரை டொவினோ தாமஸ் எப்படி விரட்டியடித்தார்? சாதிய ஒடுக்குமுறையை மீறி காதலியை எப்படி கைப்பிடித்தார்? என்பதை படம் சற்று குழப்ப கும்மியடித்துச் சொல்கிறது
கதையின் நாயகனாக டொவினோ தாமஸ்! மூன்று பரிமாணங்களில் வருகிறார். சிறப்பாக நடித்துள்ளார். பெரும் வீரனாக வரும் கேரக்டரும் சரி, பெரும் திருடனாக வரும் கேரக்டரும் சரி, Live-ல வரும் ‘ரொம்ப நல்லவன்’ கேரக்டரும் சரி சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி ஷெட்டி கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தில் வேலையே வைக்கவில்லை. சுரபி லட்சுமி, ரோஹினி, பேஸில் ஜோசப், ஹரிஷ் உத்தமன், உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்து போகிறார்கள்
சுஜித் நம்பியாரின் கதையும் திரைக்கதையும் கோர்வையற்று பயணிக்கிறது. எந்த எமோஷ்னலுக்குள்ளும் நம்மால் ஒன்ற முடியவில்லை. முக்கியமாக மெயின் கேரக்டர்கள் மேல் நமக்கு எவ்வித அட்டாச்மெண்டும் இல்லை என்பது திரை எழுத்தின் ஆகப்பெரிய பலவீனம். திபு நினன் இசை பரவாயில்லை. ஜோமென் டி.ஜான் ஒளிப்பதிவு தரமாக அமைந்துள்ளது. வரைகலை கூட நன்றாக கை வந்துள்ளது
மேக்கிங்கில் இருந்த நேர்த்தியை திரைக்கதையில் காட்டியிருந்தால் இந்த வீக்- என்ட்க்கு ஏற்ற படமாக அமைந்திருக்கும் இந்த ARM
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்