சில படங்களின் டைட்டிலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சசிகுமார் நடிப்பில் வெளியாகிவுள்ள அயோத்தி படத்தின் டைட்டிலும் அப்படித்தான். அயோத்தி என்ற வார்த்தைக்கும் இந்திய அரசியலுக்கும் அப்படியொரு வரலாறு உண்டு. சரி இந்தப்படம் எதைப்பேசியிருக்கிறது?
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வருகிறது ஒரு குடும்பம். வரும் வழியில் அந்தக்குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒரு ஆள் இறந்துவிடுகிறார். அவரின் சடலத்தை எந்தப் பிரேத பரிசோதனையும் செய்யாமல் காசிக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது அந்தக் குடும்பத்தினரின் முடிவு. அக்குடும்பத்திற்கு உதவும் சூழல் சசிகுமாருக்கு வருகிறது. சசிகுமார் எப்படி உதவி செய்தார்? சசிகுமார் யார்? என்பதாக விரிகிறது திரைக்கதை
வெகுநாட்களுக்குப் பிறகு அல்ல…வெகு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சசிகுமாருக்கு பெயர் சொல்லும்படி ஒருபடம். இயல்பாக நடித்திருந்தாலும் இன்னும் அவர் கதாப்பாத்திரத்தோடு ஒன்றவில்லை என்பதே வருத்தமான நிஜம். காமெடி செய்து கடுப்பேற்றிய புகழ்..இப்படத்தில் காமெடி செய்யாமல் கவனம் ஈர்க்கிறார். போலவே கல்லூரி வினோத் கவனிக்க வைக்கும் கதாப்பாத்திரத்தில் நச்சென நடித்துள்ளார். நாயகி, வில்லன் என ஒவ்வொரு கேரக்டரின் நடிப்பும் தனி முத்திரை
இசையால் உணர்வுகளை தழுவும் தருணங்கள் படத்தில் நிறையவே இருப்பதை உணர்ந்து இசைஞர் தன் மொத்த வித்தையையும் இறக்கியிருக்கிறார். கண்களுக்குள் நுழையும் காட்சிகள் நெஞ்சில் அமரும் அளவில் ஒளிப்பதிவு தனிப்பதிவாக கலக்குகிறது
மிகவும் ஜீவனுள்ள கதையில் ஆங்காங்கே தென்படும் சிறுகுறு மசாலத்தனங்களை தவிர்த்திருக்கலாம். நீ, நான், என்கிற பதத்தை நாம் ஆக மாற்ற அன்பு ஒன்று தான் வழி என்பதை மிக அழகாக புரிய வைத்த இயக்குநருக்கு நல் வாழ்த்துகள்
அயோத்தி- அவசியம் போக வேண்டிய யாத்திரை
4/5
-மு.ஜெகன் கவிராஜ்