Tamil Movie Ads News and Videos Portal

தசரா – விமர்சனம்

காமமும் போதையும் செய்யும் அநீதிகளுக்கு முடிவு கட்டும் நாயகனின் கதை

“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என புத்தி சொல்லும் யோக்கியதை எனக்குண்டு” என்பது கவிஞர் கண்ணதாசனின் statement. அதற்கேற்றாப் போல் ஹீரோ கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாயகன் நானி முன்பாதியில் குடி குடியென குடித்துத் தள்ளுகிறார். கீர்த்தி சுரேஷ் மீது கொண்டுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார். தன் நண்பனும் கீர்த்தியும் உயிருக்குயிராக காதலிப்பதை நினைத்து வெம்மினாலும் நாசூக்காக மறைக்கிறார். ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள வில்லன் ஒருவரால் பெரும் அசம்பாவிதம் நடக்க கீர்த்தி சுரேஷுக்கு பெரும் இழப்பொன்று ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய நானி எடுக்கும் முடிவு தான் படத்தின் கதையாக விரிகிறது.

நானி அழுக்குப் பையனாக அழகாக ஈர்க்கிறார். குடிக்கும் போதும் சரி..க்ளைமாக்ஸில் வெடிக்கும் போதும் சரி பின்னியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தானொரு நடிகையர் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். நானியின் நண்பராக வருபவர் அட்டகாசமாக நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் வருபவரின் நடிப்பும் கன கச்சிதம். சமுத்திரக்கனி சிறப்பான தேர்வு. பூர்ணாவும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்

படத்தில் பின்னணி இசை பெரிய ரோல் ப்ளே செய்திருக்கிறது. கூடவே கேமராவும் படத்தை பலமாக தூக்கி நிறுத்தியுள்ளது. இடைவேளைக்கு முன்பான பத்து நிமிடங்கள் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் மேக்கிங். ஒளிப்பதிவாளர் கூட்டணிக்கு பெரிய சலாம்

முன்பாதியில் ஒரு சமூக சீர்திருத்தம் பற்றிப் பேசப்போவதாக துவங்கும் படம் பின்பாதியில் சாதாரண பழிவாங்கும் படமாக மாறிவிட்டது. அந்தச் சறுக்கலைச் சரி செய்திருந்தால் தசரா இன்னும் பெருந்திருவிழாவாக அமைந்திருக்கும். நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் அபார உழைப்பால் இந்த தசரா பார்டரைத் தாண்டுகிறது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Dasara #Nani # KeerthySuresh,