எளியவர்களின் தீபாவளியை வலிமையோடு சொல்ல முயன்றுள்ளனர்
ஹீரோ விக்ராந்த், அவரது மனைவி மற்றும் மகனோடு ஏழ்மை சூழ வாழ்ந்து வருகிறார். நாளை மறுநாள் தீபாவளி என்ற நிலையில் அவர் வேலை செய்யும் கொரியர் கம்பெனியில் அவருக்கு போனஸ் கிடைக்கவில்லை. மகனுக்கு புது உடையும், மனைவிக்கு புடவையும், தனக்கொரு ஹெல்மெட்டும் வாங்க வேண்டும் என்பது அவரது தீபாவளி கனவு. அந்தக் கனவு ஈடேறியதா?/ என்பதே படத்தின் கதை
கதையின் நாயகனாக விக்ராந்த் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். தமிழ்சினிமாவில் சில நடிகர்களை மட்டும், “இவருக்கு எல்லாத் திறமையும் இருக்கு. ஆனாலும் ஜெயிக்க முடியலியே?” என்று சொல்வோமல்லவா? அந்தக் கேட்டகிரியில் ஒருவர் விக்ராந்த். ஏனோ இன்னும் அவருக்கான காலை மட்டும் விடியாமலே இருக்கிறது. ரித்விகா எளிமையான மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார். கணவர் மீதான காதலிலும், மகன் மீதான கண்டிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
பாடல் பின்னணி இசை இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் கிடைத்த பட்ஜெட்டில் ஒப்பேற்றியுள்ளார்.
இந்த எளிய கதைக்குள் சில நாடகத்தனமான காட்சிகளை எழுதும் போதே தவிர்த்திருக்கலாம். அல்லது எடுத்த பின்பாவது தரித்திருக்கலாம்
பட்ஜெட்டில் சின்ன படமாகவும் கதையாக்கத்தில் நல்ல படமாகவும் இருக்கும் படங்களை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்..சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் எளிய மக்களின் தீபாவளியை கண்முன் காட்டியுள்ளார் இயக்குநர். அந்த வகையில் இந்த தீவாவளி போனஸ், நிச்சயமாக போனஸ் தீபாவளி தான்
3/5
-தமிழ் வெண்பா