காதல் என்பதே விபத்து என்பதற்கிணங்க ஒரு விபத்தின் மூலம் பூர்ணா & திரிகுன் இருவருக்கும் காதல் முளைக்கிறது. கவனிக்க.. பூர்ணா திருமணம் ஆனவர்!
தன் காரை ஓட்டிச் செல்லும் பூர்ணா டிராவலர் திரிகுன்-ஐ இடித்து விடுகிறார். இதனால் காயம் ஏற்படுகிறது திரிகுன்னுக்கு. அந்தக் காயத்தை கூடவே இருந்து பூர்ணா ஆற்றும் போது இருவருக்குள்ளும் காதல் பற்றிவிடுகிறது. பூர்ணாவின் கணவனான விதார்த் விசயம் அறிந்து என்ன செய்தார்? என்பதாக படத்தின் கதை விரிகிறது
ஒட்டுமொத்த படத்திலும் பல்வேறு மனநிலை குணநலனை வெளிப்படுத்தும் வாய்ப்பு பூர்ணாவிற்கு மட்டும் தான். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். விதார்த் நல்ல நடிகர் என்பதைப் படத்திற்குப் படம் நிரூபணம் செய்தே வருகிறார். இப்படத்திலும் அவரது நடிப்பு நச் ரகம். திரிகுன் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார்.
பின்னணி இசையை வயலினால் வாசித்துத் தள்ளியுள்ளார் மிஷ்கின். ஆச்சர்யம் என்னவென்றால் இசை அமைப்பாளராக முதல் படத்திலே மிஷ்கின் முத்திரைப் பதித்துள்ளார் எனலாம். கேமராமேன் தன் கண் வண்ணங்கள் வழியாக ஒளி வண்ணங்களை சிந்தித்து நமக்குத் தந்துள்ளார். ஓகே ரகமாக அமைந்துள்ளது அவரது பணி
கணவன் மனைவி மீது அட்டாச் இல்லாததால் மனைவிக்கு வேறோர் உறவு மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. வேறோர் பெண்ணோடு உறவில் இருக்கும் கணவனுக்கு தன் தடுமாற்றத்தை விட, மனைவியின் மனமாற்றம் பெரும் வலியை ஏற்படுத்துகிறது என்பதை சமூக உளவியலோடு படம் பேச முயன்றாலும் தடுமாற்றம் திரைக்கதையும் அலுப்பு நிறைந்த காட்சியமைப்புகளும் சுவாரஸ்யமற்றதாக இருப்பதால் டெவில் நம்மை செவிளில் அறைந்து விடுகிறது
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்