காருக்குள் நடக்கும் கதை அல்ல..நம் பாருக்குள் நடக்கும் கதை.
ஒரு சிறைக்கைதியை அவனது உறவுகள் அழைத்து வருகிறார்கள். கைதியின் காம இச்சைக்கு ஒரு பெண் தேவைப்பட, பேருந்து நிலையத்தில் நிற்கும் நாயகி ரித்திகா சிங் கடத்தப்படுகிறார். கடத்திச் செல்லப்படும் காருக்குள் அவர் படும் அவஸ்தைகள் என்ன..முடிவில் அவர் தப்பினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை!
இந்தியாவில் ஒரு நிமிடத்திற்குள் எத்தனையோ பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் மீட்கப்பட்டாலும் கடத்தப்பட்ட பின் அந்தப் பெண்களின் உளவியல் எப்படி இருக்கிறது என்பதை அக்கறையோடு பேசியிருக்கிறார் இயக்குநர் ஹரிஸ் வர்தன்.
படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவும் தனது நடிப்பு தான் என்பதை உணர்ந்து நடித்துள்ளார் ரித்திகா சிங். புலிகளிடம் சிக்கிய மானாக அவர் பரிதவிக்கும் காட்சிகள் எல்லாம் நம்மை கலங்க வைக்கின்றன. அவரைத் தவிர்த்து திரையை ஆக்ரமிக்கும் நால்வரும் நல்ல தேர்வுகள் தான்.
ஒரு பரபர திரைக்கதைக்கு சப்போர்டிவான தொழில்நுட்ப கூட்டணி படத்திற்கு வாய்த்திருப்பது படத்தின் பலம் தான். ஒரு நல்ல நோக்கத்தோடு எழுதப்பட்ட கதையில், திரைக்கதை அசுர பலத்தோடு அமையாதது வருத்தம். இது ஒரு டாகுமெண்ட்ரி என ஒதுக்கிடவும் முடியாது. அதே சமயம் ஒரு சமூக கருத்துகள் அடங்கிய மாற்று சினிமா என கொண்டாடவும் முடியாது. முயற்சிக்கு பாராட்டுக்கள் அவ்வளவே
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்