ரத்தம் தெறிக்க யுத்தம் முடிக்கும் ஒற்றை ஹீரோவின் அதிரடி மேளா தான் கே.ஜி.எப்2 . பாகம் ஒன்றில் இருந்த அதே பவரை பாகம் இரண்டிலும் கொண்டு வந்து மெகா ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
கே.ஜி.எப் சாம்ராஜ்யத்தின் மேல் போர்தொடுக்க வருகிறார் சஞ்சய் தத். அவருடனான பகையை வெல்லும் ஹீரோவிற்கு அரசாங்க அளவிலும் எதிர்ப்பு வலுக்க, தங்கக்கோட்டை நாயகனின் வேட்டை முடிவு என்ன? என்பதே படத்தின் கதை
யஷ் என்ற ஒற்றை நடிகரின் நடையிலும் உடையிலும் அடியிலுமே மொத்தப்படமும் பயணிக்கிறது. மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு ஹீரோ நூறுபேர்களை அடிக்கிறார் என்றால் அதற்கான நியாயமும் நம்பகத்தன்மையும் திரைக்கதையில் இருக்க வேண்டும். அது படத்தில் சிறப்பாக இருக்கிறது. அதனாலே யஷ் செய்யும் எல்லா லாஜிக் மீறல் சண்டைகளையும் நம்மால் ரசிக்க முடிகிறது. சஞ்சய்தத் இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். குண்டடி பட்டு படுக்கையில் கிடந்து உருமும் போது ஒரு சிங்கத்தின் தொனி அவரிடத்தில். நாயகி உள்பட நம்மூர் சரண் வரை படத்தில் அனைவருமே நடிப்பில் குறைவைக்கவில்லை
இந்த கே.ஜி.எப் சாம்ராஜ்ஜியத்தின் இரும்புத்தூண்கள் படத்தின் டெக்னிஷியன்கள் தான். வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஒளிப்பவதிவாளரின் கலரிங் தேர்வு முதல், பில்டப் ஷாட்கள் வரை அவ்வளவு நேர்த்தி. கங்க்ராட்ஸ்! அன்பறிவ் மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றையும் ஒருவாரம் கூட திரும்ப திரும்பப் பார்க்கலாம். சிஜி கிரவுட் கூட்டத்தைக் காட்டும் போதுகூட ஓரளவு நேர்மையாக இருப்பது ஆறுதல்.
முதல் பாகத்தில் இருந்த அம்மா செண்டிமெண்ட் இதில் கொஞ்சமே கொஞ்சம் மிஸ்ஸிங். மேலும் அம்மாம் பெரிய நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியோடு ஹீரோ அசால்டாகச் சென்று வதம் செய்வதெல்லாம் பெரிய லாஜிக் மீறல் தான். ஆனாலும் சீட்டின் நுனியில் இருந்து நம்மை நகர விடாமல் படத்தைப் பரபரவென கொண்டு போகும் அட்டகாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங்கிற்காக கே.ஜி.எப் கோட்டைக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம்… ஃபேன் இண்டியா மூவியில் இதுவொரு நிஜமான பயங்கரம்
-மு.ஜெகன் கவிராஜ்