திருப்தியான திரையனுபவம்
அரிதாக வரும் சில சினிமாக்கள் நம்மை உலுக்கிப் போடும். கொட்டுக்காளி அந்த ரகம். இசை இல்லாத சினிமா. எதார்த்த காட்சிகளால் நம்மை கலங்கடிக்கிறது. சூரி திருமணம் செய்ய நினைக்கும் முறைப்பெண்ணுக்கு பேய்க்கோளாறு என, ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். மூன்று பைக், ஒரு ஆட்டோ என மொத்தம் 13 பேர் பயணிக்கிறார்கள். அவர்கள் சாமியாரை சென்றடையும் இடைப்பட்ட நேரத்தில் படத்தின் கதை நகர்கிறது. திரையை விட்டு அகலாத ஸ்டாட்டிக் ப்ரேம்ஸ் படமெங்கும் காட்சிமொழிக்கு சாட்சியாக கவர்கிறது
ஆணாதிக்கத்தின் உச்சத்தை தொடும் முகபாவத்தை அகம்பாவம் நிரப்பி நடித்துள்ளார் சூரி. ஒடும் ஆட்டோவிற்குள் அவர் நிகழ்த்தும் தாண்டவம் சூரித்தாண்டவம். அன்னாபென் பார்க்கும் பார்வை ஒவ்வொன்றுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். சூரியின் அப்பா, தாய்மாமன், இரு அக்காக்கள், ஒரு அக்கா மகன் உள்பட திரைதொட்ட அனைவரின் நடிப்பிலும் எதார்த்தம் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்களின் நடிப்பிற்குப் பின்னால் இருக்கிறது இயக்குநர் வினோத்குமாரின் உழைப்பு
வெகு இயல்பான ஒளிப்பதிவு. தெளிவான திட்டமிடலால் தான் இப்படியான ஷாட்கள் வாய்ப்பெற்றிருக்கின்றன. சூரியின் கண்ணுக்குள் விழுந்த தூசியை எடுக்கும் ஒரு காட்சியிலுள்ள உள்ள ஒரு ஷாட் உலகத்தரம். இசையால் எழுப்பப்படும் உணர்வை அது இன்றியே கடத்த முடியும் என்ற இயக்குநரின் நம்பிக்கை வீண் போகவில்லை. லைவ்-ஆன சவுண்ட் எபெக்ட் சிறப்பு
இன்னொருவனை மனதில் சுமக்கும் தன் முறைப்பெண்ணின் மனதை சாமியாரை வைத்து மாற்றிவிடலாம் என நம்பி, ஒரு குடும்பமே பயணிக்கும் கதையில் ஆங்காங்கே பேசப்படும் உளவியல் ஆச்சர்யப்படுத்துகிறது. தரமான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்தக் கொட்டுக்காளி கொண்டாட வேண்டிய சினிமா
4/5
-மு.ஜெகன் கவிராஜ்