ஈகோ மற்றும் காதலை கமர்சியல் கலந்து காட்சிகளாக்கி, கலகல திரைக்கதையால் சிக்ஸர் அடித்துள்ளது லப்பர் பந்து
தினேஷ் ஹரிஷ்கல்யாண் இருவரும் கிரிக்கெட் லவ்வர்ஸ். தினேஷின் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் லவ்வர்ஸ். இவர்கள் லவ்விற்கு தினேஷ்& ஹரிஷின் கிரிக்கெட் லவ்வே வில்லனாக இருக்க, ஈகோ பத்திக்கிறது. அந்த ஈகோ நெருப்பிற்கு இடையில், படத்தில் சாதி அரசியலும், மாமியார் மருமகள் லவ், கணவன் மனைவி லவ் என சில பல எமோஷன்ஸும் கலந்து கட்டினால் லப்பர் பந்து கதை ரெடி. But திரைக்கதை சரவெடி
படத்தின் முதல் வெற்றி நடிகர்களின் தேர்விலும் அந்தந்த நடிகர்களின் நடிப்பிலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்தில் கெத்து காட்டும் தினேஷ் கேரக்டர் ஆகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மனிதன் அசராமல் சுழன்றடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் பல சீன்களில் தனது மெச்சூட் ஆன நடிப்பால் உள்ளம் கவர்கிறார். நாயகிகள் சஞ்சனா, சுவாசிகா! ஆஹா இருவருமே அபாரம். துடுக்கத்தனமும் பேரன்பும் நிறைந்த சஞ்சனா நெஞ்சை நிறைக்கிறார் என்றால், கண்டிப்பும் காதலும் கொண்ட சுவாசிகா நம் கண்களை நிறைக்கிறார். அவரது பார்வையும் உடல்மொழியும் அந்தக் கேரக்டரின் ஆன்மாவை பிரதிபலித்துள்ளது. கிட்டத்தட்ட படத்தின் எதிர்நாயகன் ரேஞ்சிற்கு டி.எஸ்.கே பட்டையக் கிளப்பியுள்ளார். காளி வெங்கட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டருக்கு வழக்கம் போல் 100% நியாயம் செய்துள்ளார். தினேஷின் குடிகார நண்பராக வருபவரும், பால சரவணனும் படத்தில் எல்லா இடங்களிலும் ஸ்கோர் பண்ணுகிறார்கள். இரண்டாம் பாதியில் கிரிக்கெட் வர்ணனையாளராக வரும் ஆதித்யா கதிர் கிரிக்கெட் கிரவுண்டுக்கு வெளியில் இருந்தே காமெடி சிக்ஸரை பறக்க விடுகிறார். பின்பாதி படத்திற்கு அவரின் ஒன்லைன் கவுண்டர்கள் ஆக்சிஜன். தினேஷின் அம்மாவாக வரும் நடிகை பல இடங்களில் எமோஷ்னல் நிறைந்த நடிப்பால் கலங்கடிக்கிறார். தினேஷின் மாமியாராக வரும் ஜானகியும் அசத்தியுள்ளார். இவர்கள் தவிர்த்து படத்தில் வரும் சின்னச் சின்ன கேரக்டர்களும் நன்றாக கவனம் ஈர்க்கிறார்கள். இயக்குநரின் எழுத்திற்கு கிடைத்த வெற்றி இது
ஒரு திரைப்படத்தின் நல்ல ஆக்கத்திற்கு ஊக்கமே ஒளிப்பதிவு தான். அது லப்பர் பந்தில் லட்டு லட்டாக அமைந்துள்ளது. பேட்டிலிருந்து புறப்படும் பந்துகளை பாலோ செய்வதில் கூட கேமராமேன் பின்னியிருக்கிறார். ஜான் ரோல்டன் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிகம் மெனக்கெட்டுள்ளார். சிறப்பான பிஜி.எம். ஆங்காங்கே வரும், இளையராஜா பாடல்களும், தேவா பாடல்களும் இதமோ இதம்.
இயக்குநரின் கூர்மையான வசனங்கள் படம் மீதான மரியாதையை ஏகத்திற்கும் ஏற்றுகிறது. “நான் அவனை 17 வருசம் தான் வளத்தேன். அதுக்குப் பிறகு 23 வருசம் நீ தான் வளத்த. புருசனை விட்டுட்டு பொண்டாட்டி போகலாம். பிள்ளைய விட்டுட்டு தாய் போகலாமா? நீ அவனுக்கு அம்மால்லா” என்ற வசனம் ஒரு சோறு பதம்
ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள் திறமையிருந்தும், வாய்ப்பை இழக்கும் சூழலையும், அதற்குப் பின்னாலிருக்கும் சாதி அரசியலையும் துளியும் பிரச்சார நெடி இல்லாமல் போகிற போக்கில் கையாண்டுள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து. சபாஷ்! கூடவே போலி நடுநிலையாளர்களை பொட்டில் அடித்திருப்பதும், ஆம்பளைத் திமிரை அட்டாக் செய்திருப்பதும் வேறலெவல். நிச்சயமாக பக்கா தியேட்டர் மெட்டிரியல் இந்தப் படம்
லப்பர் பந்து- பொட்டு வச்ச தங்க குடம்
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்