Tamil Movie Ads News and Videos Portal

மாமன்னன்- விமர்சனம்

“அறிந்து பல சாதி முதல் அன்பொன்றுக்குள்ளானால் பிரிந்து மிக வாழாமல் பெரியோனாய் வாழ்ந்திருப்பார்” என்ற வாசகம் அய்யா வைகுண்டருடையது. மாமன்னன் படத்தில் தலைப்பாகை கட்டி நாமத்தை வைத்துக்கொண்டு கண்ணாடி வழிபாடு செய்யும் ஒரு கேரக்டர் வருகிறது. “நீயே ஒளி” என்ற பெயர் கொண்ட அவ்வழிபாட்டு முறையின் பிரதியாக உதயநிதி வருகிறார். சுய மரியாதைக்கும் திமிர்த்தனத்திற்குமான வித்தியாசத்தை நன்கு புரிந்த ஒரு கேரக்டராக உதய் வார்த்தெடுக்கப்பட்டுள்ளார். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் அது. அய்யாவழி பாட்டில் நாற்காலி மிக முக்கியமான வடிவம். இந்த மாமன்னனின் கதையே நாற்காலியை மையப்படுத்தியது. ஒரு நாற்காலியில் யார் முன் யார் உட்காரணும்? என்ற கேள்வியே தவறு எனும் போது அந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது சேடிஷம் அல்லவா?

கதை?

சாதிப்பெருமை ஏற்படுத்தும் உளவியல் குரூரங்களும், சமத்துவம் ஏற்படுத்தும் மனவிசாலமும் தான் கதை. “சாதியை மற சமுத்துவத்தை நினை” என பாடமெடுக்காமல் உண்மையை பக்கத்தில் சென்று படம்பிடித்துள்ளார் மாரிசெல்வராஜ். பாதிப்பை ஏற்படுத்தும் கூட்டத்தையும், பாதிக்கப்பட்ட கூட்டத்தையும் கூட்டி, அதை அரசியலாக்கும் போது என்ன நடக்கும் என்பதையும் படம் பேசியுள்ளது. இறுதியில் உறுதியான ஒன்று. அறமும் அன்பும் ஒருக்காலமும் தோற்காது என்பது. “தரணியது அழிந்தாலும் சத்தியம் தான் அழியாதப்பா” என்பதும் அய்யா வைகுண்டர் வாக்கு

வடிவேலு எங்கு நம்மை சிரிக்க வைத்துவிடுவாரோ என்று பயந்தேன். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். அவர் கூனிக்குறுகி நிற்கும் போதும், எகிறி அடிக்க துணியும் போதும் காட்டும் உடல்மொழி அசத்தல்! பஹத் எனும் நடிப்பு அசுரனுக்கு போதிய தீனி இல்லை என்றாலும் பஹத் பயர்🔥 தான். நேர்த்தியே இல்லாத பாத்திரத்தை கீர்த்தி கையில் கொடுத்துள்ளனர். அவரும் சமாளித்துள்ளார். உதயநிதி தன் பலம்& பலவீனம் அறிந்து நடித்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் படத்தின் ஆழத்தை முழுதாக உள்வாங்கியுள்ளார். சிறப்பான பின்னணி இசைக்கோர்வை..பாடல்கள் தனியாக கேட்கும் போது கொடுத்த இன்பத்தை படமாக பார்க்கும் போது கொடுக்கவில்லை. தேனி ஈஸ்வர் எதார்த்தம் விலகாமல் ஒளிப்பதிவைச் செய்துள்ளார்

படத்தின் முக்கியக்காட்சியில் பேசுபொருளாக இருக்கும் இருக்கைப் பிரச்சனையை படத்தின் க்ளைமாக்ஸில் கம்பீரமாக அமைத்த விதம் ஒரு படைப்பாளியாக மாரிசெல்வராஜை உச்சிமுகர வைத்தது. ஒரு திரைமொழி ரசிகனுக்கு ஏற்படுத்தும் உளவியல் அறிந்து சில காட்சிகளை அமைத்துள்ளார் மாரி. குறிப்பாக ஒரு கிணத்துக் காட்சியைச் சொல்லலாம்.

சறுக்கிய இடம்?

நிச்சயமாக இந்த மாமன்னன் முழுமையானவன் அல்ல. அழுத்தி அழுத்தி சில விசயங்களைச் சொன்னாலும் நம் மனதில் அழுத்தமான உணர்வை ஏற்படுத்தவே இல்லை. பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய அதிர்வோ, கர்ணன் (சில காட்சிகள் மட்டும்) ஏற்படுத்திய பதட்டமோ இப்படத்தில் எங்குமே இல்லை. (இடைவேளை காட்சி நன்று) பின்பாதி படத்தில் கிட்டத்தட்ட ஒருமணி நேர புட்டேஜில் கமர்சியல் புகுந்து ஆட்டத்தை காலி செய்துள்ளது. ஒரு பிரச்சனைக்கான தீர்வை முன் வைத்தது PP. பிரச்சனையின் தீர்வை அதிகார வர்க்கம் ஏற்கவில்லை என்றாலோ… அது தரும் ஒவ்வாமை வன்முறையை துவக்கினாலோ..பாதிக்கப்பட்ட தரப்பும் வன்முறையைத் தான் எடுக்கும். வன்முறையின் வழி தவறு என்றாலும் அதற்கான வழியை ஏற்படுத்துவது அதைவிட தவறு என்றது கர்ணன்! மாமன்னனில் அப்படியான தீர்க்கமான பார்வை இல்லை..அல்லது எனக்குத் தெரியவில்லை. முதல்வர், “ஓ..உன்னை அப்படிச் செய்றாங்களா? இதோ பார் உன்னை அதிகாரத்தில் வைக்கிறேன்” என்பதெல்லாம் எதார்த்தம் விலகிய மொண்ணை புரிதல். தண்ணி தொட்டியில் மலம் போட்டவர்களை திட்டவோ அடிக்கவோ மனம் வராத அரசு கொண்டது நம்நாடு!

இரு பிரிவு கதை என்பதாக போக்கு காட்டி வில்லன் ஹீரோ மோதல் என்பது போல படம் மடைமாற்றப்பட்டுள்ளது. ஒரு தேர்ந்த கதை சொல்லல் முறை கைவரப்பெற்ற மாரிசெல்வராஜ் இந்தப்படத்தில் சற்று இடறி இருந்தாலும் சிலபல பாசிட்டிவ் அம்சங்களால் படம் கொடி கட்டிப்பறக்கிறது. அந்தக் கொடி வடிவேலுவின் துணையோடு உயரப்பறக்கிறது.

So சற்று இடறி இருந்தாலும் பிடரியை உலுக்குகிறார் இந்த மாமன்னன்🙌
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்

#maamannan #மாமன்னன்