சில சந்தர்ப்பங்கள் நம்மை ஹீரோவாகவும் வில்லனாகவும் மாற்றும். இந்தப்படத்தில் ஒரு சந்தர்ப்பம் இருவரை எப்படியெப்படி மாற்றுகிறது என்பதை காட்டியுள்ளனர்
ஹீரோ ஸ்ரீநிகம் தன் சென்னைக் காதலியை சொந்த ஊரில் வைத்து ஜாம் ஜாம் என திருமணம் முடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். திருமண ஏற்பாடு காட்சியோடு தான் படமே துவங்குகிறது. எதிர்பாராத விதமாக பக்கத்து ஊரைச் சேர்ந்த கோபக்கார கலையரசனின் மனைவியை விபத்துக்கு உள்ளாக்கிவிடுகிறார் ஸ்ரீநிகம். அதனால் அவரது கல்யாணம் தடைபடும் சூழல் வருகிறது. கலையரசனுக்கும் ஒரு இழப்பு நேர்கிறது. இந்த இருவரின் மோதல் துவங்கிய வேகத்தில் அடுத்தடுத்த ட்விஸ்ட் வர, முடிவில் ஸ்ரீநிகம் கலையரசன் கேமில் யார் வென்றார்கள்? என்பதாக கதை பயணிக்கிறது. ஆக்சனை விட எமோஷ்னலை நம்பி இப்படம் பயணிக்கிறது என்பது கூடுதல் தகவல்
நாயகனாக ஸ்ரீநிகம். மலையாளத்தில் கவனிக்கக்கூடிய நடிகர். தமிழில் ஹீரோவாக முதல் தடத்தைப் பதித்துள்ளார். நல்ல நடிப்பால் கவர்கிறார். இருப்பினும் அவரது கேரக்டருக்கான ரைட்டிங் இன்னுமே ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம். கலையரசன் திறமையான நடிகர் என்றாலும், சில இடங்களில் சின்ன தடுமாற்றம் தெரிகிறது. ஏனைய கேரக்டர்கள் யாருக்கும் பெரிதாக வாய்ப்பு இல்லை. கருணாஸ், ஸ்ரீநிகம் நண்பர்கள், கலையரசன் மனைவி ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர்
படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். சத்தம் கொஞ்சம் அதிகம் தான். சில இடங்களில் இசையால் படம் உயிர்ப்போடு பயணிப்பதும் உண்மை. ஒளிப்பதிவாளர் தனது வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
மிக இயல்பாக ஆரம்பிக்கும் படம் 15 நிமிடத்திற்குள் நம்மை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்கிறது. முதல் பாதியில் ஸ்ரீநிகம் சந்திக்கும் பிரச்சனையின் வீரியம் கொஞ்ச கொஞ்சமாக விரியும் போது படம் செம்ம என்கேஜிங்காகவே போகிறது. முதல் பாதி வரை இது ஒகே தான்..But இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகளை இழுத்து இழுத்து முடிக்கிறார்கள். அதனால் படம் இழுவையோ என தோன்றுகிறது. இருப்பினும் பிரில்லியன்ட் ஆன அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அட போட வைக்கிறது.
மெட்ராஸ்காரன்- நம்ம ஊர்க்காரன்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்