சமூகம் சில விசயங்களில் தன் மதியை மாற்றவே இல்லை என்கிறார் இந்த மதிமாறன்
மூன்றடி உயரம் கொண்ட ஹீரோ. உடல் வளர்ச்சியின்மை அவரை பலரின் கேலிகளுக்குள் தள்ளுகிறது. ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் அடுத்தடுத்த கட்டம் நோக்கி நகர்கிறார். உருவத்தை வைத்து ஒருவனின் அந்தஸ்த்தை நாம் குறைக்கிறோம். அவனை நாம் சக மனிதனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவன் பெரும் சாதனையாளனாக மாறவேண்டியதிருக்கிறது. எல்லோராலும் அப்படி மாறிவிட முடியாது அல்லவா? என்ற மதிமாறனின் கேள்வி அகம் அடிக்கும் நிஜம். இந்தக் கேள்வியை படம் பல்வேறு கமர்சியல் ரூட்டில் பயணித்து எழுப்புகிறது
மதிமாறன் பேசும் அரசியல் மிக முக்கியமானது. ஒரு மனிதனை நான்கு பேர் முன்னால் செவிட்டில் அடிப்பதை விட அநீதியானது அவனை மனதில் அடிப்பது. குறிப்பாக மூளையில் அடிப்பது. “கடுகு சிறுத்தாலும் காரம் குறையல” என்ற பழமொழியில் இருக்கும் உளவியல் அடியை இந்தப்படத்தில் இயக்குநர் அம்பலப்படுத்தியுள்ளது சிறப்பு
அழகு என்பது அறிவில் இருக்கிறது என்று சொல்லும் மதிமாறன், “தன்னுருவை நினைத்து துளி கூட கலங்காமல், ஏனைய மனிதர்களாய் திரையில் பேசுகிறார், கலாய்க்கிறார், காதலிக்கிறார். ஊனம் என்பதற்கும் சகஜமாய் வாழ்தலுக்கும் சம்பந்தமில்லை என்ற மனநிலை மதிமாறனுக்கு வாய்த்திருப்பதை போல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வாய்க்க வேண்டும் என்று அறமுரைக்கும் இந்த மதிமாறனை சினிமா ரசனை தாண்டி வரவேற்க வேண்டும் என்பேன்
இந்தப்படத்தின் தூண்கள் என நடிகர்கள், டெக்னிஷியன்கள் கொண்டாடப்படுவார்கள். பெரிதும் கொண்டாடப்பட வேண்டியவர் படத்தின் தயாரிப்பாளர். இப்படியான கதையும் களமும் நமக்கு பணம் சேர்க்குதோ இல்லையோ, நிறையபேர்களுக்கு கனம் சேர்க்கும் என்றெண்ணியே படத்தை வழங்கியுள்ளார். எந்தக் குறையுமில்லாமல் செலவு செய்துள்ளனர். காலேஜ் போர்ஷன் என்றாலே புரொடக்சன் சைடில் மிகவும் யோசிப்பார்கள். புரொடக்சனில் இருப்பதால் சொல்கிறேன். கிரவுட் இல்லாமல் காலேஜ் காட்சிகளை எடுக்க முடியாது. யூனிட்டில் ஜுனியர் ஆர்டிஸ்ட் என 50 பேர் வந்தால் கூட பட்ஜெட் எகிறும். இந்தப்படத்தில் நிறைய கிரவுட் வைத்து காலேஜ் காட்சிகளை நன்றாக எடுத்துள்ளனர். அடுத்தடுத்து தரமான படங்களை எடுக்கவிருக்கும் தயாரிப்பாளருக்கு நல் வாழ்த்துகள்
ஒருவனின் ஊனத்தை காட்டி நம்மை அவர்கள் மேல் இரக்கப்பட வைக்கும் பிற்போக்குத் தன காட்சிகளை தவிர்த்து, மாஸான காட்சிகளை அமைத்திருக்கும் அந்தத் தில்லுக்காகவும், அந்தத் தில் தரும் நம்பிக்கைக்காகவும் மதிமாறனை மறுபடியும் பார்ப்பேன்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்