Tamil Movie Ads News and Videos Portal

மிரள்- விமர்சனம்

தமிழில் வெகுநாட்களுக்குப் பின் ஒரு திரில்லிங் கலந்த பேய்படம்! படத்தில் பேய் இருக்கா இல்லியா என்பது சஸ்பென்ஸ்

நடிகர் பரத் கட்டிட பொறியாளர். அவரின் காதல் மனைவி வாணிபோஜன் ஒரு மன அழுத்தத்தில் இருக்கிறார். மேலும் தன்னைச் சுற்றி சில அமானுஷ்யங்கள் நடப்பாகவும் நம்புகிறார். அதற்கான தீர்வாக ஊரிலிருக்கும் குலதெய்வக்கோயிலுக்குச் சென்று கிடாவெட்டி படையல் போட்டால் சரியாகிவிடும் என்று வாணிபோஜனின் அம்மா சொல்ல, பரத், வாணி போஜன், இவர்களின் மகன் மூவரும் ஊருக்குச் செல்கிறார்கள். ஊரிலிருந்து வரும்போது பேய் உலவுவதாகச் சொல்லப்படும் ஒரு ஏரியாவில் பரத் பேமிலி சிக்குகிறது. அதன் பின் நடக்கும் தடக் தடக் நிமிடங்கள் தான் படத்தின் கதை

பரத் வெகுநாட்களுக்குப் பிறகு திரையில் முழு ஹீரோவாக வருகிறார். ஒரு குடும்பத்தலைவனாக தேர்ந்த நடிப்பில் கலக்கியிருந்தாலும் ஒருசில இடங்களில் சற்று மந்தநிலையில் இருக்கிறார். வாணிபோஜன் படம் நெடுக சோக முகத்தோடு வருகிறார். அதற்கான காரணம் படம் முடியும் போது தெரிய வருவதால் ஏற்றுக்கொள்ளலாம். கே.எஸ் ரவிக்குமார் சிறிய பாத்திரம் ஏற்றாலும் கன கச்சிதம்

படத்தின் முதன்மை ஹீரோ இசை அமைப்பாளர் பிரசாத் s.n தான். படம் ஏற்றாத டெம்போவை கூட அவரது இசை ஏற்றுகிறது. அடுத்ததாக சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு. நைட் எஃபெக்ட்டில் அவர் வைத்துள்ள ஷாட்கள் எல்லாம் மிரட்டல் ரகம். சின்னச் சின்ன சவுண்டிங் வொர்க்கும் செம்ம.

படத்தைப் சிக்கனமாக எடுத்து முடித்தது போல..திரைக்கதையையும் சிக்கனமாக அமைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல். பரத் தன் மனைவியின் உளவியல் சிக்கலைத் தீர்க்க எடுக்கும் முயற்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. குறிப்பாக வசனங்களில் மெனக்கெடல் என்பது மருந்திற்கும் இல்லை. மெயின் கேரக்டர்களின் குணாதியசங்களிலும் குழப்படிகள் இருக்கின்றன. இவையெல்லாம் படத்தின் குறைபாடுகள் என்றாலும் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்கும் படத்தில் சோர்வடைய வைக்கும் காட்சிகள் பெரிதாக இல்லை என்பது ஆறுதல். 70% ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் க்ளைமாக்ஸும் படத்தின் பெரும்பலம்

மிரள்- லேசான மிரட்டல்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்