அதீத காதலைக் கொண்ட தலைப்போடு வந்துள்ள நேசிப்பாயா படம் ரசிகனை நேசிக்கிறதா?
அறிமுக ஹீரோ ஆகாஷ்முரளிக்கும் அதீதிக்கும் அதீதமான காதல். இருவரும் காதலில் கரைந்துருகிறார்கள். அதிக காதல் என்றால் எப்படியும் பிரிவு என்பதும் இருக்கும் தானே?! இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் போர்ச்சுகல் நாட்டிற்குச் செல்லும் நாயகி ஒரு கொலைக் குற்றத்திற்காக சிறைவசப்படுகிறார். பிரிந்த காதலியாக இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய வேண்டி ஆகாஷ் முரளி அங்கு செல்கிறார். அதன்பின் அங்கு என்னென்ன நடக்கிறது? என்பதே படத்தின் கதை
அறிமுகம் என்ற சுவடே தெரியாத வண்ணம் நடித்துள்ளார் ஆகாஷ்முரளி. ஒரு காதல் மற்றும் ஆக்ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சமும் அவரிடம் உள்ளது. அதீத ஷங்கர் தனது வழக்கமான நடிப்பை விட்டு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போர்ச்சுகலில் வரும் போர்ஷனில் ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளுகிறார்.
யுவனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தரமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் இருவேறு நிலப்பரப்பின் அழகியலையும் தன் கேமராவிற்குள் அழகாக கொண்டு வந்து, நம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
ஒரு காதல் படம் போல ஆரம்பித்தாலும், போகப்போக படம் ஒரு அட்டகாசமான திரில்லர் படமாக பயணிக்கிறது. எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படம் பரபரவென பறப்பதால் நேசிப்பாயாவை நாம் நிறையவே நேசிக்க முடிகிறது
3/5
-வெண்பா தமிழ்