மதத்தை மதவாதிகள் வியாபாரமாகச் செய்யத் துவங்கினால், அது எளிய மக்களின் வாழ்வை எப்படியெல்லாம் நிலைகுலைய வைக்கும் என்பதை நெத்திப்பொட்டில் அடித்துச் சொல்கிறது நிலைமறந்தவன் படம்
தன்னம்பிக்கை பேச்சாளராக வரவேண்டும் என்ற வேட்கையோடு வாழும் பகத்பாசில் தன் தம்பியை ஒரு கட்டத்தில் இழக்கிறார். அதன்பின் அவர் வாழ்வில் ஒரு மாற்றம் வருகிறது. அந்த மாற்றம் அவரை ஒரு பெரிய மதபோதகராக மடைமாற்றுகிறது. அதற்குப் பின்னால் பெரும் சூழ்ச்சியும் அரசியலும் இருக்கிறது. முடிவில் பகத்பாசில் சென்றடையும் இலக்கு என்ன என்பதே நிலைமறந்தவன் கதை
நடிப்பு ராட்சசன் எனச்சொல்லப்படம் பகத்பாசிலே படத்தின் ஒட்டுமொத்த பலம். தன் நடிப்பால் மட்டுமே படத்தைத் தாங்கிப்பிடிக்கிறார். நஸ்ரியாவிற்கு பெரிய வேலை ஒன்றுமில்லை. கெளதம் மேனென் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். விநாயகன் கேரக்டரின் வரைவும் அருமை
கன்னியாகுமரி எபிசோடை கவிதை போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது
படத்தின் துவக்கம் ஒரு கவிதை போல இருக்கிறது. ஆனால் அந்தக் கவிதைப் பயணம் கமர்சியல்+ மதப்பயணமாக மாறும் போது திரைக்கதை சற்று சோர்வடைந்து விடுகிறது. இருந்தாலும் மனிதனின் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளை வைத்து பிழைப்பு நடத்தும் போலி மதவாதிகளை அடையாளம் காட்டியதில் ஜெயிக்கிறான் நிலைமறந்தவன்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்