Tamil Movie Ads News and Videos Portal

நிறம் மாறும் உலகில்- விமர்சனம்

“தெய்வம் பெரிது என்று புராணம் சொன்னாலும், பெற்றவள் பெரியவள் என்று தெய்வமே சொல்லும்” என்றொரு கவிதை உண்டு. தாயின் அன்பிற்கு ஈடில்லை என்பதற்கு யாரையும் சாட்சியாக்கலாம். அப்படியான தாயனபைப் பேசுகிறது நிறம் மாறும் உலகில்

அம்மாவிடம் சண்டையிட்டு வீடு துறந்து வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணுக்கு டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் வைத்து நான்கு கதைகளைச் சொல்கிறார். அந்தக் கதைகளே படத்தின் திரைக்கதையாக விரிகிறது

அம்மா என்றால் உயிர் என்று வாழும் நாயகன் நட்டிக்கு ஒரே ஆசை, இறந்து போன தன் அம்மாவோடு இணைந்து கடலில் உள்ள தேவதைகளை காண வேண்டும் என்பது. மும்பை டான் ஆன அவருக்கு அது சாத்தியமானதா?

மனைவியை தாயாக உணரும் பாரதிராஜா வரும் கதை சற்று அழுத்தமான கதை. மற்ற கதைகளில் எல்லாம் தாயன்பே நிறைந்துள்ளது.

நட்டியின் கேரக்டரை நல்ல சுவாரஸ்யம் கூட்டி எழுதியுள்ளார் இயக்குநர். நட்டியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாண்டி மாஸ்டர் தனது அழுத்தமான நடிப்பை கச்சிதமாக பதிவு செய்துள்ளார். ரியோவும் சரி கோழிப்பண்ணைச் செல்லத்துரை படத்தின் ஹீரோ ஏகனும் சரி, தரமான பங்களிப்பைச் செய்துள்ளனர். பாரதிராஜா, யோகிபாபு, லவ்லி சந்திரசேகர்,
ஐரா கிருஷ்ணன், துளசி உள்ளிட்ட திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் நல்ல முறையில் நடித்துள்ளனர்.

தேவ் பிரகாஷ் ரீகன் இசையால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே அசத்தல். ஒளிப்பதிவும் படத்திற்கு பாசிட்டிவ் வழியை ஏற்படுத்தியுள்ளது

இயக்குநர் பிரிட்டோ JP முதல் படத்திலே தாயன்பை தொட்டிருக்கிறார். நிறைய க்ளிஷே சமாச்சாரங்கள் படத்தில் தெரிந்தாலும், பாசம் என்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம். மனம் மாறும் மனிதர்களில் மாறா மனம் கொண்ட தாய்மையைப் பேசியுள்ள இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்
3/5
-வெண்பா தமிழ்