தலைப்பில் இருக்கும் தவறு படத்தில் இருக்கிறதா?
வேலைவெட்டி பெரிதாக இல்லாவிட்டாலும் லட்சியம் பெரிதாக இருக்கும் நான்கு இளைஞர்கள். வீட்டு வாடகைக்கு வழியில்லாமல் ப்ளாட்பாரத்திற்கு வருகிறார்கள். அப்போது கே.கே நகர் தொகுதியில் தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அந்தத் திட்டம் என்ன? என்பதும், அந்தத்திட்டத்தின் முடிவு என்ன என்பதுமே படத்தின் கதை
நாயகன் என்று குறிப்பிட்டுச் சொல்ல யாருமில்லை. நான்கு பேரும் ஒரு பொண்ணும் என ஐந்து மெயின் கேரக்டர்கள்..ஐவருமே கதைக்குள் ஐக்கியமாகி நடித்துள்ளனர். எம்.எஸ் பாஸ்கர் தன் ரோலை கச்சிதமாகச் செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் உள்பட பலரும் நடித்துள்ளனர். எல்லோருமே சின்னதாக ஸ்கோர் செய்கிறார்கள். சுயேட்சை வேட்பாளராக வரும் நமோ நாராயணன் சிறப்பு
பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு கணம் சேர்த்துள்ளது. குறிப்பாக டி.ராஜேந்தரின் குரலில் ஒரு நெடுங்கவிதை வருகிறது. அந்த கவிதைக்கு கொடுக்கப்பட்டுள்ள பி.ஜி.எம் அல்டிமேட். அந்தக் கவிதையை டி.ஆரின் குரலில் கேட்பது அட..அட அருமை. படத்தை மிகவும் தேக்க நிலையில் காட்டுவது ஒளிப்பதிவு தான். பல காட்சிகளுக்கு 5D கேமரா தான் யூஸ் பண்ணினார்களோ? என்னவோ? விஷுவல்ஸ் மிகவும் வீக் ஆக இருக்கிறது. குறிப்பாக படத்திற்கு கலரிங் செய்தார்களா இல்லை அப்படியே ரிலீஸ் செய்தார்களா? என்ற டவுட்டும் வந்துவிட்டது. இன்று சேட்டிலைட் சேனல்களும் ஓடிடி நிறுவனங்களும் மிகச்சிறந்த குவாலிட்டியை எதிர்பார்க்கின்றன. சூழல் இப்படியிருக்கையில் விஷுவலில் கவனம் கொள்ள வேண்டாமா?
எது தேவையோ அதுவே அறம் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் ஐவர் டீம், அடுத்தடுத்து செய்யும் சாகசங்களில் லாஜிக் இல்லை என்றாலும் மேஜிக் இருக்கிறது. எந்த இடத்திலும் ரைட்டிங் ஆக படம் தேங்கவே இல்லை. சதுரங்கவேட்டை படம் போல பல இடங்களில் வசனங்களே கைத்தட்டல் பெறுகின்றன. இன்னும் காட்சிகள் கோரி நிற்கும் பிரம்மாண்டத்தைச் செய்திருந்தால் ஒரு தவறு செய்தால் படம் நிறைய சரிகளைச் செய்திருக்கும். இருப்பினும் தேவைக்காக அறம் மீறிச் சென்றாலும் முடிவில் அறமே வாழ்தலின் சிறப்பு என்று சொன்னவற்றிற்காக படத்தில் இருக்கும் சில தவறுகளை மறந்து, படத்தை தவறாமல் பார்க்கலாம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்