மாடுகள் என்பது கிராமத்து மனிதர்களுக்கு சிறு தெய்வங்கள் போல. மாடுகளோடு வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் மாடுகள் இல்லா வாழ்வை நினைத்துப் பார்ப்பதே கடினம். இப்படத்தின் நாயகனுக்கு மாடுகள் மீது பெருங்காதல். அப்படியான மாடுகள் காணாமல் போக நாயகன் மிதுன் மாணிக்கம் மாடுகளை கண்டு பிடித்தாரா என்பதே கதை.
கமர்சியல் படத்திற்குள் அரசியலை மேலோட்டமாக புகுத்தினாலே கவனம் பெற்றுவிடலாம். ஆனால் இப்படியான ரியாலிட்டி சினிமாவில் அரசியலை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அப்போது தான் ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் இயக்குநர் பல இடங்களில் முத்திரைப்பதிக்கிறார்.
மாடுகளை தாக்குபவர்களிடம் சீறும்போது கிராமத்தின் காவல்தெய்வம் போல அத்தனை துடிப்பு மிதுன் மாணிக்கத்திடம். வேடத்திற்கு சரியாகப் பொருந்தி இலகுவாக ஈர்க்கிறார் நாயகன். அவரின் மனைவியாக வரும் நடிகை ரம்யாபாண்டியன் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புகுந்து அடிக்கிறார். நல்ல நடிப்பு. வாணிபோஜனின் தேர்வும் கவனிக்க வைக்கிறது. கதையின் வேகத்திற்கு அவரது கேரக்டர் முக்கியமாக இருக்கிறது. சாதாரண பிரச்சனை என வெகுஜனம் நினைக்கும் ஒன்றை பெரும் பிரச்சனையாக மாற்றி கவனம் பெற வைப்பதில் ஒரு இயக்குநராக தனித்துத் தெரிகிறார் இயக்குநர் மூர்த்தி.
பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே முரண்டு பிடிக்காமல் ட்ரெண்ட் பிடித்திருக்கிறார் இசை அமைப்பாளர் கிருஷ். சுகுமாரின் ஒளிப்பதிவும் தனிப்பதிவு. சூர்யாவின் தரமான தயாரிப்பில் மேலும் ஒரு படம் இந்த ரா ரா.