Tamil Movie Ads News and Videos Portal

சலார்- விமர்சனம்

கே.ஜி.எப் எபெக்டை நடிகர்களை மாற்றி வைத்துக்கொடுத்தால் அதுதான் சலார்

கான்சார் என்ற ஒரு தனி ராஜ்ஜியம். பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிஷ்க்கே சவால் விட்ட ராஜ்ஜியம் அது. அப்படியான கான்சார் ராஜ்ஜியத்தில் 1985-ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் ஜெகபதி பாபு. அவரது மகன் சிறுவன் பிருத்விராஜ் தன் நண்பனான பிரபாஸுக்காக ராஜாங்க முத்திரை ஒன்றை இழந்து விடுகிறார். அதனால் பிரபாஸ் மற்றும் அவரது அம்மா காப்பாற்றப்படுகிறார்கள். அப்போது பிரபாஸ் பிருத்வி ராஜிடம் ஒரு வாக்கு கொடுக்கிறார். அதாவது நீ எப்போது அழைத்தாலும் உனக்கு உதவ நான் வருவேன் என்ற வாக்குறுதி அது. அதன்பின் காலங்கள் உருண்டோடி பிருத்வி ராஜ் பிரபாஸ் பெரியவர்கள் ஆகிறார்கள். கான்சார் ராஜாங்கத்தில் பிருத்விராஜுக்கு ஒரு பிரச்சனை வர பிரபாஸ் செல்கிறார். அதன்பின் அங்கு நடக்கும் அரசியல் ஆக்‌ஷன் தான் படம்..செகண்ட் பார்ட் லீடும் கான்சாரிலே கொடுக்கப்பட நாம் தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம்.

பிரபாஸ் ஆறரை அடி ஆஞ்சநேயர் போல் மிரட்டுகிறார். நொடிக்கு நொடி யாரையாவது அடித்துக்கொண்டே இருக்கிறார். படத்தில் வரும் 80% நடிகர்கள் அவரிடம் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் கேரக்டர் படத்தை ஸ்டார்ட் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு குத்தாட்டமோ துள்ளாட்டமோ எதுவுமே இல்லை. நாலு ஷாக் ரியாக்சன். நாலு ஆக்‌ஷன் ரியாக்சன். அவ்வளவே. ஈஸ்வரி ராவ், மைம்கோபி, ஜான் விஜய் உள்ளிட்ட டஜன் கணக்கு நடிகர்கள் அனைவரும் ஒரே மாடுலேசனில் பேசி டரியல் ஆக்குகிறார்கள். இன்றைய தேதியில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கும் பிரித்விராஜ் பிரபாஸ் சண்டைபோடும் போது கண்களை மூடிக்கொள்கிறார். பாவத்த

படத்தில் ரவி பஸ்ரூரின் இசை எனும் ஓசை சற்று ஓவராகவே இருக்கிறது. ஆனால் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ற பில்டப்பை இசை தரவே செய்கிறது. ஒளிப்பதிவாளர் புவன் கெளடாவும், எடிட்டர் உச்வால் குல்கரினியும் கொஞ்சம் கலந்தாலோசித்து ஸ்லோமோஷன் ஷாட்களை குறைத்திருக்கலாம். குறைத்திருந்தால் எப்படியும் அதனாலே ஒரு மணிநேரம் புட்டேஜ் மிச்சம் வந்திருக்கும்.

கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இன்னும் அந்த கே.ஜி.எப் உலகில் இருந்து வெளிவரவில்லை. படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் அது வெளிப்பட்டு நிற்கிறது. அடுத்தடுத்த பார்ட் எடுக்க வேண்டும் என்பதற்காக முதல் பார்ட்டில் நிறைய கதை சொல்லியிருக்கிறார். அவர் திரையில் சொல்லும் கதையில் துளியும் எமோஷ்னல் கூடிவரவில்லை..அம்மா செண்டிமேண்ட் சும்மா செண்டிமெண்ட் ஆகிவிட்டதும் பெருங்குறை. கதாப்பாத்திரங்களுக்குள் இருக்கும் பந்தமும் பகையும் மிகையான நாடகமாகவே இருப்பதும் பெரும் மைனஸ்

எனக்கு ஹீரோ 100 பேரை அடிக்கிறது பிடிக்கும். மற்றது எதுவும் தேவையில்லை என்று நினைப்பவர்கள் இந்தப்படத்திற்குச் செல்லலாம். ஏனென்றால் பிரபாஸ் 1000 பேரை அடிக்கிறார் நான் அந்த ஆயிரத்தில் ஒருவன்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்