Tamil Movie Ads News and Videos Portal

சிறுவன் சாமுவேல்- விமர்சனம்

“ஏல நான் இன்னைக்கு நம்மூர் தேட்டர் கடைல ரொட்டிசால்னா (ப்ரோட்டா) தின்னேன்” திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் இதை ஒரு சாதனையாக சொன்ன காலம் ஒன்று இருந்தது. சிறு சிறு பண்டங்களும், அரிதான ஓட்டல் சாப்பாடும் 90-களின் சிறுவர்களுக்கு ஆகப்பெரும் கொண்டாட்டம்..அப்படியான கொண்டாட்டங்களில் ஒன்று தான் அந்தக் கால சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வமும். அந்த ஆர்வத்தையும் அவர்களின் வாழ்வையும், வாழ்வை அவர்கள் கொண்டாடும் தருணங்களையும் வாழ்வில் எதற்காகவெல்லாம் அவர்கள் திண்டாடுகிறார்கள் என்பதையும் கன்னியாகுமரி பின்னணியில் காட்சிமொழியாக்கி திரையில் ஓர் சிறார் இலக்கியம் படைத்திருக்கிறார் இயக்குநர் சாது
சிறுவன் சாமுவேல் தமிழில் ஓர் ஈரானிய சினிமா முயற்சி எனலாம்.

வறுமை சூழ்ந்த பெற்றோரிடம் கிரிக்கெட் பேட் கேட்கிறான் சிறுவன் சாமுவேல். வீட்டில் அதற்காக அவனுக்கு தனி “கவனிப்பு” கிடைக்கிறது. பின் அவன் பல விதமான முயற்சிகளை (அந்த முயற்சிகளை திரையில் காண்பது பேரனுபவம்) மேற்கொள்கிறான். பேட் வாங்குவதற்காக செய்யும் அவனது முயற்சிகள் என்னவானது? என்பதே படத்தின் கதை

சாமுவேலாக நடித்துள்ள அஜிதன் தவசிமுத்து அதிகம் பேசாவிட்டாலும் அத்தனை உணர்வுகளையும் முகத்தில் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளான். சினிமா வாடையே தெரியாத பின்னணியில் வளர்ந்த சிறுவனுக்குள் இப்படியொரு தேர்ந்த நடிப்பை கொண்டு வந்ததில் இருக்கிறது இயக்குநர் சாதுவின் பேருழைப்பு. அஜிதன் தவசிமுத்து போலவே மிரட்டியிருக்கிறான் சிறுவன் விஷ்ணு. அவன் கண்கள் பேசாத வசனங்கள் எல்லாம் அவன் பேசும் வசனங்களை விட ஈர்க்கிறது

கன்னியாகுமரியில் எங்கு கேமராவை வைத்தாலும் அழகாயிருக்கும் என்பார்கள். அந்த வார்த்தையை மெய்ப்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் V.சிவானந் காந்தி. S.சாம் எட்வின் மனோகர்& J.ஸ்டாண்ட்லி ஜான் இருவரின் இசையிலும் குமரி மக்களின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. படத்தின் கதையை முழுவதுமாக உள்வாங்கி கதையாகவே மாறினால் தான் இப்படியான அசலிசையை வழங்க முடியும். முழுக்க முழுக்க குமரி வட்டாரவழக்கு என்பதால் ரிகார்டிங் போகாமல் வசனங்களை லைவாக பதிவு செய்துள்ளார்கள். அது மிகப்பெரித சவால். சாதித்துள்ளார்கள். சவுண்ட் டிசைனர் R.நரசிம்ம மூர்த்திக்கு ஸ்பெசல் வாழ்த்துகள்.

கவிதை போல துவங்கும் படம் கவிதை போலவே முடிகிறது. மென் உணர்வுகளை வார்த்தைகளாக்கி நாவல் எழுத முடியும். ஆனால் திரைக்கதையில் அதைச் சாத்தியப்படுத்துவது மிகக்கடினம். அதை அழகாகச் செய்துள்ளார் இயக்குநர் சாது. ஒரு சிறுவனின் கனவுக்குள்ளும், ஆசைக்குள்ளும் புகுந்து யோசித்திருப்பதினாலே இந்தப்படம் நமக்குள் ஆழமாக கனெக்ட் ஆகிறது. 200 திரையரங்குகளில் வெளியாக வேண்டியபடம். சினிமாவின் வணிக எதார்த்தம் காரணமாக 20 திரையரங்குகளில் மட்டுமே மே13-ஆம் தேதி வெளியாகிறது. அவசியம் கண்டு களியுங்கள். சற்று நேரம் நம் மனதில் குழந்தை மணம் வீசும்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்

#SiruvanSamuel #சிறுவன் சாமுவேல்