பிரிந்த போன காதலை திருமணத்திற்கு பின் மீட்டெடுக்க நினைத்தால் என்னவாகும்? பதில் சொல்கிறது தீராக்காதல்
நடிகர் ஜெய் ஷிவதாவோடு குடும்பம் நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறாள். வேலை விசயமாக ஜெய் மங்களூர் செல்லும் போது பாலக்காடு ரெயில் நிலையத்தில் அவரது பழைய காதலியான ஐஸ்வர்யா ராஜேஷை எதார்த்தமாக சந்திக்கிறார். அந்தச் சந்திப்புகள் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுக்கிறது இருவருக்கும். அந்த இனம்புரியாத இன்பம் அளிக்கும் விளைவுகள் என்ன? என்பதே மீதிக்கதை
ஒரு செட்டிலான குடும்பத் தலைவனை கண்முன் நிறுத்துகிறார் ஜெய். மிக அமைதியான அதே சமயம் ஆழமான நடிப்பு. மனைவிக்கும் காதலிக்கும் இடையில் அவர் பரிதவிக்கும் காட்சிகள் எல்லாம் அப்ளாஸ் ரகம். ஐஸ்வர்யா ராஜேஷ் சில இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். அப்படியொரு ராட்சச நடிப்பு. ஷிவதா மிக அழகாக நடித்து இயல்பாக மனதில் பதிகிறார். ஆர்த்தி கேரக்டரில் வரும் குட்டிப்பெண்ணும் சூப்பர் நடிப்பு
சித்துக்குமாரின் பின்னணி இசையும் இப்படத்தின் ஒரு கதைசொல்லி தான். இசை அவ்வளவு இயல்பாக கதையோடு பயணிக்கிறது. ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும் அப்படித்தான். கதைக்குத் தேவையில்லாத ஒரு ஷாட் கூட படத்தில் இல்லை. வைத்துள்ள எல்லா ஷாட்ஸும் அருமை
முதல் பாதியில் ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் மீட்டிங் சாட்டிங்கில் சற்று ஸ்லோவாகவே பயணிக்கும் படம் இண்டெர்வெலுக்குப் பிறகு வேறோர் பரிணாமம் எடுக்கிறது. படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என ஓரளவு யூகிக்க முடிந்தாலும், 96, ஜில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களின் தாக்கம் திரைக்கதையில் இருந்தாலும், Upper மிடில் க்ளாஸ் தம்பதிகளின் உளவியலைச் சரியாக அலசியுள்ள விதத்தில் கவர்கிறார் இயக்குநர். ஒரு சீனை காட்சிப்படுத்தி கன்வே பண்ணிய விதத்திலும் இயக்குநர் ஜெயித்து விட்டார். ஒரு சராசரி ஆணின் மனநிலையை தத்ரூபமாக பிரதிபலித்த ஜெய் கேரக்டரின் ஸ்கெட்ச் அட்டகாசம். நமது முந்தைய காதல் என்பது எப்போதும் ஒரே உணர்வை தரக்கூடியது தான். அந்த உணர்வை மனதில் தீட்டி நினைவோடு மட்டும் வைத்திருங்கள் என்று மனதைத் தொட்டுச் சொல்கிறது இந்தத் தீராக்காதல். ஆக தீராக்காதல் மீது தீராத காதல் கொள்ளலாம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்
#TheeraKaadhal #தீராக்காதல்