அறம் சார்ந்து நிற்பவனே மனிதன் என்ற கருத்தைப் பேசியுள்ள ஒரு சினிமா திரு.மாணிக்கம்
தமிழக எல்லையில் அமைந்துள்ள குமிளியில் லாட்டரிக்கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி அனன்யா, இரு பெண் குழந்தைகள் என வாழும் அவருக்கு வறுமையும் மற்றொரு பிள்ளையாக கூடவே இருக்கிறது. இரு மகள்களில் ஒரு மகளுக்கு பேச்சு சரியா வராது. சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவை. இச்சூழலில் அவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க lot of the கமிட்மெண்ட்ஸ் உள்ள பாரதிராஜா வருகிறார். அவர் சமுத்திரக்கனியிடம் வாங்கியச் சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. ஆனால் பாரதிராஜா வாங்கியச் சீட்டு சமுத்திரக்கனியிடம் இருக்கிறது. அது ஏன்? அடுத்தடுத்து நடந்தது என்ன? என்பதே படத்தின் கதை
கதையின் நாயகன் நேர்மையின் உச்சமாக வாழ்பவன் என்பதால், சமுத்திரக்கனியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல. அவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். பாரதிராஜா பல இடங்களில் ஓவர் டோஸ் ஏற்றுகிறார். அனன்யா கேரக்டர் அழுத்தமாக எழுதப்படவில்லை. இளவரசு, கருணாகரன், தம்பி ராமையா உள்பட பலர் தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்
படத்தில் இசை ஒளிப்பதிவு இரண்டும் துருத்தல் இல்லாமல் அமைந்துள்ளது.
எல்லாக் கேரக்டர்களுக்கான முன்கதையும், முக்கியக் கேரக்டர்களுக்கான தேவையும் காட்சியாக்கத்தில் செயற்கையாகவே அமைந்துள்ளது. அதனால் படத்தோடு பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதியும் க்ளைமாக்ஸும் நம்மை ஓரளவு இறுக்க அணைத்துக் கொள்கிறது
நேர்மையாக வாழ்கிறவனுக்கு அதிர்ஷ்டம் என்பது அவனது நேர்மை தான் என படத்தை முடித்த விதம் சிறப்பான ஒன்று
திரு.மாணிக்கம்- குறைகள் இருந்தும் மின்னுகிறார்
3.25/5
-வெண்பா தமிழ்