அன்பால் ஏத்துக்கிற எல்லா உறவும் நல்ல உறவு தான் என்ற ஒன்லைனை வைத்து பக்கா எமோஷ்னல் திரில்லர் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். காவல் அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பஸ்ஸில் தான் கண்ட ஒரு இளைஞனான சுபாஷ் செல்வத்தை மிகவும் பிடித்துப் போகிறது. பின் அவர்களுக்குள் நட்பு&காதல் வளர்கிறது. அதே சமயம் ஐஸ்வர்யா ராஜேஷின் உயிர்த்தோழியான அனன்யா ராம்பிரசாத் இறந்து போகிறார். அந்தக் கொலைக்கு யார் காரணம்? ஐஸ்வர்யா ராஜேஷின் காதலன் எப்படி இந்தக் கொலை கேஸுக்குள் வருகிறார் என்பதே திட்டம் இரண்டு படத்தின் கதை.
விக்னேஷ் கார்த்திக்கிற்கு இதுதான் முதல்படம் என்று சொன்னால் எளிதில் யாரும் நம்பமாட்டார்கள். இயக்கம் மற்றும் திரைக்கதையில் அவ்வளவு நேர்த்தி. ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சில இடங்களில் மட்டும் அந்தக் காவல் அதிகாரி பாத்திரத்திற்கு அந்நியமாக தெரிகிறாரே ஒழிய…முக்கியமான காட்சிகளை எல்லாம் அசால்டாக டீல் செய்கிறார். அவர் தன் தோழியின் அன்பை எண்ணி நெகிழும் போதும், இறுதியில் எதிர்பாராத ஒரு விசயத்தை சந்திக்க நேரிடும் போதும் தான் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை என்பதை சிறப்பாக நிரூபித்துள்ளார். அவரோடு நடித்துள்ள பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், அனன்யா ராம்பிரசாத், சுபாஷ் செல்வம், முரளி ராதாகிருஷ்ணன், ஜீவாரவி உள்பட அனைவருமே தங்களது பாத்திரங்களை உணர்ந்து தேவைக்கேற்ப நடித்து அசத்தியுள்ளார்கள்..
சதிஷ் ரகுநாதனின் சரியான பின்னணி இசையில் கதையோடு நாம் இலகுவாக பயணிக்க முடிகிறது. மோகன் ராஜன், தவகுமார் இருவரின் பாடல் வரிகளும் கதைக்கேற்ப அமைந்துள்ளது சிறப்பு. ஒளிப்பதிவில் அபாரமான துல்லியம் தென்படுகிறது. சபாஷ் கோகுல் பினாய். படம் துவங்கிய முதல்காட்சியில் இருந்து படத்தின் இறுதிவரை அடுத்து இதுதான் என்பதை யூகிக்க முடியாதளவில் திரைக்கதையில் அவ்வளவு மெனக்கெடல்கள். ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு பின் ஒவ்வொன்றாக அவிழ்க்கும் லாவகத்தில் சலிப்பே இல்லை என்பது தான் சிறப்பு.
மேலும் படத்தில் இதற்கு இதுதான் தீர்வு என்பதை வெளிப்படையாகச் செய்யாமல் ஆடியன்ஸை அவர்களாகவே உணரச்செய்திருக்கிறார் இயக்குநர். அதுவும் பாராட்டுக்குரியது. ஐஸ்வர்யா ராஜேஷ் தான் படத்தின் மெயின்லீட் என்றாலும் படத்தின் பயணத்திலும் முடிவிலும் அவரை முன்னிறுத்தவில்லை என்பதால் அவரது கேரக்டர் பெரிய தாக்கத்தை தரவில்லை என்பது தான் சின்னகுறை.மத்தபடி பெரிய திரையில் பார்த்து ரசித்திருக்க வேண்டிய படம்…திட்டம் இரண்டு…பார்க்கலாம் திரண்டு..
-மு.ஜெகன் கவிராஜ்