Tamil Movie Ads News and Videos Portal

வேட்டையன்- விமர்சனம்

ஓட்டைகள் நிரம்பிய வேட்டையன் கோட்டைத் தொட்டாரா? விட்டாரா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் மலிந்து கிடக்கிறது. அதைக் கண்டு கேள்வியுற்ற என் கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ரஜினி, கஞ்சா வியாபாரிகளைப் போட்டுத்தள்ளுகிறார். அந்தக் கஞ்சா கும்பலை கண்டுபுடிக்க உதவிய ஆசிரியை துசாரா விஜயனை பாராட்டுகிறார் ரஜினி. அடுத்த காட்சியிலே எதிர்பார்த்ததைப் போல துசாராவைப் போட்டுத்தள்ளுகிறான் ஒரு கொடூரன். அக்கொடூரன் யார்? அவனுக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? கொடூரன் என நினைத்து ஒருவரை என் கவுண்டர் செய்யும் ரஜினியின் குற்றவுணர்வின் தீர்வு என்ன? மேலும் படம் பேசியுள்ள கல்வி சார்ந்த அரசியலின் ஆழம் என்ன? இவை எல்லாமும் தான் வேட்டையன்

“களங்கம் வந்தாலென்ன பாரு..அதுக்கும் நிலான்னு தான் பேரு” என்ற வைரமுத்து வரிகளின் படி, எந்தப் படத்தில் நடித்தாலும் ரஜினியின் எனர்ஜி லெவல் எப்போதுமே வேறலெவல் தான். இந்த 74-வயதிலும் அவர் அலப்பறை கிளப்புவதெல்லாம் செம்ம. ஃபகத் ஃபாசில் கேரக்டர் வடிவம் அநியாய வீக் என்றாலும், மனிதர் தன்னை நிலை நிறுத்துகிறார். படத்தில் மறந்து போய் இரண்டு இடத்தில் சிரிக்கிறோமென்றால் அதற்கு அவரே காரணம்..அமிதாப்பச்சன் கால்ஷீட்டுக்குப் பதில் கால்கொயர் பேப்பர்ஷூட் வாங்கி திரைக்கதையை இன்னும் வலுவாக எழுதியிருக்கலாம்..துசாரா விஜயன் கேரக்டர் மட்டுமே மிக ஆழமாகவும் அறத்தோடும் எழுதப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். டானா ரகுபதியின் ஆபிஸுக்கு போடப்பட்ட செட்டில் இருக்கும் நேர்த்தி, அவரின் செட்டிலான நடிப்பில் இல்லை. மிகவும் பலவீனமான வில்லன் இருந்தால் பலம் பொருந்திய ஹீரோ கூட டம்மியாகிவிடுவார் என்பதே சினிமா விதி. வேட்டையனிலும் அந்தத் துயர் இருக்கிறது. ரித்திகா சிங், கிஷோர் கச்சிதம். மஞ்சு வாரியார், ரமேஷ் திலக், தக்சன் உள்ளிட்ட சில கேரக்டர்ஸ் படத்தில் சரியாக யூஸ் பண்ணப்படவே இல்லை

“இருக்கிற சுகருக்கு ஏம்பா இனிப்பை வேற ஏத்துற?” என்பது போல, அனிருத் இசை அமைந்துள்ளது. எதாவது வாசித்துப் படத்தைத் தேத்த பிரயத்தனப்பட்டுள்ளார். எஸ்.ஆர் கதிரின் ஒளிப்பதிவு சிறப்பு

ஜெய்பீம் படத்தில் மிக அழுத்தமான ஒன்றைப் பேசிய ஞானவேல், வேட்டையனிலும் மிக முக்கியமான விசயத்தை டீல் செய்துள்ளார். ஆனால் திரைக்கதையிலும் எமோஷ்னல் கனெக்டிலும் துளிகூட மெனக்கெடவில்லை. சரி ஒரு ஹீரோ படமாக இருக்கிறதா? என்றால் அதுவும் மிஸ்ஸிங். படமெங்கும் எல்லாத் தடயங்களையும், முடிச்சுகளையும் ஃபகத் ஃபாசில் தான் அவிழ்க்கிறார். ரஜினி அதை ஃபாலோ மட்டுமே செய்கிறார். மேலும் கேரக்டர் ஆர்க் என்பது கதையில் மருந்திற்கும் இல்லை. ஒரு கமர்சியல் ஹீரோ படமாக துவங்கி, இன்வெஸ்டிகேசன் படமாக பயணித்து, சமூக படமாக முடிகிறது வேட்டையன்

கல்வி சார்ந்த திட்டங்களை தனியார் வகுத்து கொண்டு வந்தால், அதன் பின்னணியிலுள்ள “மாணவ வதையை” அரசு கண்கொண்டு காணவேண்டும்” என படம் பேசியிருப்பது அர்த்தமுள்ளது. ஆனால் அதைச் சரியான அளவில் கொடுக்காததால் வேட்டையன் ரசிகனையே வேட்டையாடுகிறார்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்