Tamil Movie Ads News and Videos Portal

விநோதய சித்தம்- விமர்சனம்

தமிழ்சினிமாவில் எப்போதாவது எழுதப்படும் அழகிய திரைக்கவிதை விநோதய சித்தம். நேரம் தவறாமையை கடைப்பிடித்தும் தன்னால் மட்டும் தான் தன் குடும்பம் அலுவலகம் இரண்டையும் வழி நடத்த முடியும் என உறுதியாக நம்பும் ஒருவரிடம், காலன் வந்து நீயெல்லாம் வெறும் தூசு…நீயின்றியும் உன் குடும்பம் உன் ஆபிஸ் எல்லாம் தன்னாலே இயங்கும்” எனச் சொன்னால் எப்படி இருக்கும்? அதையே சாட்சியாக்கி காட்டினால் எப்படி இருக்கும்? இதுதான் விநோதய சித்தம் படத்தின் கதை

இந்த உலகத்தில் சின்ன புள்ளியில் நாம் இயங்குகிறோமே ஒழிய..இந்த உலகம் நம்மால் இயங்கவில்லை. நாம் காலையில் நேரத்தே விழிக்காவிட்டாலும் சூரியன் உதிக்கத் தான் செய்யும், நாம் வீட்டில் சண்டையிட்டு சாப்பிடாமல் இருந்தாலும் மனைவிக்கு பசிக்கத் தான் செய்யும். கடமை, லட்சியம், ஓட்டம், இவை எல்லாவற்றிக்குள்ளும் இருப்பது கற்பனையும் கனவும் தானே தவிர இவை நிரந்தரம் அல்ல..இவை நம்மால் மட்டுமே சாத்தியப்படும் என்பதும் உண்மையில்லை. நீயின்றி எதுவுமில்லை என்பதெல்லாம் ஆகப்பெரும் பொய். நாமில்லா விட்டாலும் இங்கு எல்லாமிருக்கும்.. எல்லாரும் இருப்பார்கள். வெற்றிடத்தை இயற்கை பூர்த்தி செய்துகொள்ளும். இப்படியான எதார்த்த தத்துவத்தை நெத்தியில் அடித்துப் புத்திக்குள் இறக்குகிறது படம்.

நடிகர் சமுத்திரக்கனியை விஞ்சி வானளவில் உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. மேலும் தம்பி ராமையா எனும் மகா நடிகனுக்கு மிகப்பெரிய சிம்மாசனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தம்பி ராமையாவும் பொறுப்புணர்ந்து அடித்து ஆடியிருக்கிறார்.

படத்தின் திரைக்கதைக்குள் நம்மை நுழைத்துக் கொள்ள வழி அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் சத்யா. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும் தன் கேமராக்கண்களை கொண்டு பெரும் தரிசனத்தைத் தந்துள்ளார். படம் துவங்கிய நொடியில் இருந்து முடியும் நொடி வரைக்கும் நம் இமைகளும் இதயமும் அசையாமல் இருப்பதே ஒரு நல்ல படத்திற்கான சாட்சி. அதற்கு விநோதய சித்தமும் ஓர் சாட்சி

-மு.ஜெகன் கவிராஜ்