ட்விஸ்ட்கள் நிறைந்த இந்த விருந்திற்கு நாம் போகலாமா?
ஹீரோயின் நிக்கி கல்ராணியின் அப்பா ஒரு பெரும் தொழிலதிபர். அவர் மலைப்பகுதியில் காரில் செல்கையில் மரணமடைகிறார். அவர் மரணமடைந்த சில நாட்களிலே அவரின் மனைவி ஆஷா சரத்தும் மரணிக்கிறார். இருவரின் மரணமும் விபத்து அல்ல என தெரிய வருகிறது. ஒரு கும்பல் தான் இந்தக் கொலைகளைச் செய்தது என தெரியவரும் போது நிக்கி கல்ராணியையும் கொலை செய்ய முயற்சிக்கிறது அக்கும்பல். அப்போது அர்ஜுன் என்ட்ரியாகி நிக்கி கல்ராணியை காப்பாற்றுகிறார். அதன்பின் நிக்கி கல்ராணியே அர்ஜுனை கொல்ல முயற்சிக்கிறார். இதன் நிஜமான பின்னணி என்ன? என்பதாக படத்தின் கதை விரிகிறது
கதையின் நாயகி போல நிக்கி கல்ராணி பின்னியெடுத்தாலும், கதாநாயகனாக அர்ஜுன் காட்டும் மாஸ் எல்லாம் செம்ம. இந்த வயதிலும் அவர் இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார். நல்ல நடிப்பு. ஆஷா சரத் சிறப்பான பங்களிப்பை கொடுக்க, பாலன் கேரக்டரில் வருபவரும் நன்றாக நடித்துள்ளார். படத்தில் தோன்றும் இதர கதாப்பாத்திரங்கள் எல்லோரும் தங்கள் அளவு அறிந்து அழகாக நடித்துள்ளனர்
கதை நடக்கும் நிலப்பரப்பின் அழகை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசை ஒரு திரில்லர் பேக்கேஜுக்கான ஆர்வத்தோடு வாசிக்கப்பட்டுள்ளது. சிறப்பு.
முதல் பதினைந்து நிமிட படம், மலையாளப் படங்களுக்கே உரிய மெதுவான நடையோடு தான் பயணிக்கிறது. சரியாக பதினாறாவது நிமிடத்திலிருந்து படத்தின் திரைக்கதை வேகமெடுக்கத் துவங்குகிறது. அதன்பின் படம் வேகத்தடை இல்லாத சாலையில் போகும் கார் போல, சர்ர்ர் என பறக்கிறது. திரைக்கதை,லாஜிக் போன்றவற்றில் சில குறைகள் இருந்தாலும்,ஒருமுறை ருசிக்கும்படி எல்லா அம்சங்களும் இந்த விருந்தில் உண்டு
3/5
-மு.ஜெகன் கவிராஜ்