அப்பா மகள் செண்டிமெண்ட் படம் என்றாலே அந்தப்படம் நிச்சயமாக வொர்க்கவுட் ஆகும் என்பது தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத விதி. அந்த விதியை மீண்டும் உறுதி செய்துள்ளது பொய்க்கால் குதிரை
விபத்தில் தன் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து வாழும் பிரபுதேவாவிற்கு ஒரு மகள். மகள் தான் அவரின் உலகம்..அப்படியான மகளுக்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சினை வருகிறது. அந்தப்பிரச்சனையைத் தீர்க்க பிரபுதேவா கையில் எடுக்கும் ஆயுதம் என்ன? மகளின் இன்னலை தன் ஒற்றைக்கால் சவாலோடு எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
கவிதை போல் துவங்கும் படத்தில் பிரபுதேவா ஒரு தந்தையாக இயல்பாக ஈர்க்கிறார். மகள் கேரக்டரில் வரும் குட்டிப்பெண்ணும் அம்பூட்டு அழகு. வரலெட்சுமி படத்தில் மிக முக்கிய கேரக்டரில் வந்து அசத்தியிருக்கிறார். நண்டு ஜெகன் அயன் படத்திற்கு பிறகு இப்படத்தில் கவனிக்க வைக்கும் கேரக்டரில் நடித்துள்ளார். இதர கேரக்டர்கள் எல்லோரும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்
டி.இமானின் பின்னணி இசை கதையை அதன் போக்கில் நகர்த்த உதவியிருக்கிறது. சிங்கிளு என்ற பாடலில் பிரபுதேவாவின் துள்ளல் நடனம் போலவே இசையும் வரிகளும் துள்ளல் தான். படத்தில் ஒளிப்பதிவின் தரமும் நம்மை டிஸ்டர்ப் செய்யவில்லை.சண்டைக்காட்சிகள் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது
படத்தின் நீளம் பெரிய குறையாக இல்லாவிட்டாலும் ஒருசில தேவையில்லாத காட்சிகள் படத்தை தொந்தரவு செய்கின்றன. படம் முடிந்த பின் சிலபல லாஜிக் கேள்விகள் தொக்கி நின்றாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாருமே யூகிக்க முடியாமல் அமைந்திருப்பது படத்தின் எல்லாக் குறைகளையும் மறக்க வைக்கிறது. இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், மற்றும் பிரபுதேவாவிற்கு இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுத் தரும்..
3/5
-மு.ஜெகன் கவிராஜ்