மச்சானுக்கு ஆபத்து என்பதை அறிந்த ஹீரோ எப்படி மச்சானை தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை
நடிகர் விமல் தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆவலாய் இருக்க, வருகிற வரன்கள் எல்லாம் சகுனத்தடையால் தள்ளிப்போகிறது. மேலும் விமலுக்கு விசித்திரமான கனவும் அந்தக் கனவில் சில அறிவிப்புகளும் வரும். அந்த அறிவிப்பில் வரும் அனைத்தும் நடந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் விமலின் தங்கை கணவன் இறந்து விடுவார் என கனவில் அறிவிப்பு வருகிறது. பின் அதிலும் ஒரு ட்விஸ்ட் வருகிறது. முடிவில் என்ன தான் நடந்தது என்பதே திரைக்கதையாக விரிகிறது
விமலுக்கு இப்படம் களவாணி பேட்டர்ன் வகை என்பதால் மிகச்சாதாரணமாக நடித்துள்ளார். ஒருசில இடங்களில் மிகவும் டல்லாக தெரிகிறார். மச்சானை பாதுகாக்கும் காட்சிகளில் பட்டயக்கிளப்பியுள்ளார். விமல் தவிர்த்து பால.சரவணன், ஆடுகளம் நரேன், அவரது தம்பி கேரக்டர் ஆகியோர் மட்டுமே படத்தில் ஸ்கோர் செய்கிறார்கள்
படத்தில் இசை இது பழைய படம் என்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. பின்னணி இசையிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஒளிப்பதிவில் பெரிய ஸ்கோர் தெரியவில்லை. கிராமங்களை அதன் இயல்புத்தன்மையோடு காட்டியிருக்கும் ஒருசில காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை
மிகச்சிறிய லைன் தான் கதை. ஆனால் இதை வைத்து மிக அற்புதமான ஒரு திரைக்கதை எழுதி இயக்கியிருக்க முடியும். ஏனோ இயக்குநர் ஜஸ்ட் லைக்தட் படமாக இதை மாற்றிவிட்டார். மெயின் கதைக்குள் வருவதற்குள் படம் சொன்னதையேச் சொல்லிச் சொல்லி சிறிய வட்டத்திற்குள் முடங்கி விடுவது பெருங்குறை. முன்பாதியில் வரும் ஒரு பஸ் காமெடி, பின்பாதியில் வரும் மாப்பிள்ளை மச்சான் காமெடி ஆகியவற்றுக்காக மட்டுமே தெய்வமச்சானை தரிசிக்கலாம்
2.75/5
மு.ஜெகன் கவிராஜ்
#DeivaMachan #தெய்வமச்சான்