விக்ரம் என்ற மகா கலைஞனுக்கு முதலில் சல்யூட்
இயக்குநர் சங்கர் ஒருமுறை ஆனந்த விகடன் பேட்டியில், “ஒரு ஷாட்ல ரியலா சாகணும் என்று விக்ரமிடம் சொன்னால், இந்த ஷாட் முடிச்சிட்டு பண்ணிடுறேன் சார் என்பார்” என்றார். நடிப்பின் மீது விக்ரமிற்கு உள்ள அர்ப்பணிப்பைச் சொல்ல, சங்கரின் இந்த வார்த்தைகள் போதும். கதை, திரைக்கதையில் சிறு சிறு தெளிவின்மை இருந்தாலும் தங்கலானை கொண்டாட விக்ரம் என்ற பெரும் காரணம் இருக்கிறது
கதைக்கு வரலாம். 1850 கால கட்டத்தில் வட ஆற்காடு அருகே ஒடுக்கப்பட்ட மக்களிடமுள்ள நிலங்களை, நிலச்சுவான் தார் ஒருவர் பிடுங்கி அம்மக்களை வதைக்கிறார். அங்குள்ள பிரிட்டிஷ் அதிகாரி, ‘காட்டுக்குள் உள்ள ஒரு நிலத்தில் தங்கமுள்ளது அதை எடுத்துக்கொடுத்தால் நிலத்தை மீட்கும் அளவில் பணம் கிடைக்கும்’ என்கிறார். அந்த தங்கநிலம் பற்றிய வரலாறு விக்ரமிற்கு மாயரீதியாக தெரியும். அதனால் ஒடுக்கப்பட்ட தன் மக்களை விக்ரம் அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றபின் பிரிட்டிஷாரின் சதியும், அந்த தங்கநிலம் யாருடையது என்ற தெளிவும் தெரியவருகிறது. அதன்பின் தங்கலான் எடுக்கும் ஒரு முடிவோடு படம் நிறைவிற்குச் செல்கிறது
தேசியவிருதிற்கான எல்லா அடையாளங்களும் விக்ரமின் நடிப்பில் மிளிர்கிறது. மனைவியிடம் குழையும் போதும், தன் மக்கள் முன், ‘தான் ஒரு அங்கீகாரம் பெற்றவன்’ என்பதை காட்டும் போதும், அந்த அங்கீகாரம் மறுக்கப்படுகையில் உடையும் போதும் சீயான் தன் நடிப்பால் மெய் சிலிர்க்கச் செய்கிறார். அவருக்கு இணையாக பார்வதி எனும் நடிப்பு ராட்சசி மிரட்டியுள்ளார். மாளவிகாவிற்கு இப்படி ஒரு கேரக்டரா? என வியக்க வைக்கிறார். பசுபதி, ஹரி கிருஷ்ணன் முதல் வெள்ளைக்கார துரை வரை அனைவரும் தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தால் எந்த நடிகனும் ஒருபடி அதிகமாக மிளிர்வான் என்பதற்கு இந்தப்படமும் சாட்சி
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு தங்கலானுக்கு வைரமகுடம் எனலாம். மிகச்சிறந்த லைட்டிங்& ப்ரேமிங். ஜி.வி பிரகாஷ் எனும் அடங்காத அசுரன் பாடல்களில் மிரட்டியிருக்கிறார். வெகுசில இடங்களில் மட்டும் சத்தம் சற்று அதிகம். ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கும், லைவ் காட்சிகளுக்குமான ஸ்டார்ட்& கட்ஸில் எடிட்டர் அட போட வைக்கிறார். டெக்னிக்கலாக தங்கலான் மிரட்டியுள்ளான்
கருத்தியலில் தமிழ்பிரபா, பா.ரஞ்சித் எழுத்துக்கூட்டணி கறாராக இருந்த அளவிற்கு திரைக்கதை அமைப்பதில் இல்லை. குறிப்பாக வசனங்களில் ரொம்பவே சொதப்பியுள்ளனர். என்னதான் எதார்த்தம் வேண்டுமென்றாலும் அது மக்களுக்கும் புரியவேண்டும் அல்லவா? நிறைய வசனங்கள் காதுகளுக்குள் நுழையமுன்பே காணாமல் போய்விடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை தங்கவயலுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, கதையை வளர்த்துச் சென்றிருக்கலாம். அல்லது படத்தின் இறுதியில், ‘தங்கநிலத்தின் ஆதிகுடி யார்?’ என்ற தெளிவைக் கொடுக்கும் இடத்திலிருந்து படத்தை துவங்கியிருக்கலாம். வரலாற்றில் புனைவையும், புனைவில் பேண்டஸியையும் புகுத்தியதால் தங்கலானை, ‘எங்களான்’ என கொண்டாட முடியவில்லை.
குறிப்பிட வேண்டிய ஒரு அற்புதமான சீக்வென்ஸ் படத்தில் இருக்கிறது. விக்ரம் தன் மனைவி பார்வதி உள்பட சிலருக்கு ஜாக்கெட் கொண்டு வருவார். பார்வதி அதைக் கண்டதும் முகம் மலர்ந்து எனக்கா? என்றபடியே ஆச்சர்யம் சிந்துவார். இந்த ஒரு காட்சி தான் இந்தப்படத்தின் ஒட்டுமொத்த ஆட்சி. பெண்கள் ஜாக்கெட் அணியவும், தோள்சீலை கட்டவும் அனுமதி மறுக்கப்பட்ட வரலாற்றை அறிந்தவர்களுக்கு இந்தக்காட்சியில் உள்ள வலி புரியும். ஹேட்ஸ் ஆப் யூ ரஞ்சித்
அடுக்கப்பட்ட ஏகப்பட்ட காட்சிகளில் சுவாரஸ்யமின்மை இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமிகுந்த வாழ்வை சமரசமில்லால் சாட்சிப்படுத்தும் இப்படியான படங்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் தமிழ்சினிமாவில் இப்படியான அசாத்திய முயற்சிகள் நடக்கும் போது கை தட்டவும் வேண்டும்.
தங்கலான்- குறைகள் உண்டு தான். அதற்காக குறைத்து மதிப்பிட முடியாது
3/5
-மு.ஜெகன் கவிராஜ்