அலங்கு என்பது நாய் இனங்களில் ஒன்று என பொருள் சொல்கிறது இணையம். நாய்கள் பெரும்பாலும் மனித உணர்வுகளோடு மிகவும் நெருக்கமானது. அப்படியான நெருக்கத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
நாயகன் குணாநிதி மரணத்தருவாயில் பிழைத்த ஒரு நாயை தன்னோடு வளர்த்து வருகிறார். அவருடன் வளரும் நாய்க்கு உள்ளூர் தலைவரால் ஒரு பேராபத்து வருகிறது. அந்த ஆபத்திலிருந்து நாயை காப்பாற்ற ஹீரோ எடுக்கும் முயற்சிகளும்,போராட்டங்களுமே படத்தின் பரபர திரைக்கதை
ஆறறிவற்ற ஜீவன் என்றாலும், மனிதன் உணரும் அனைத்தையும் உணரக்கூடியது நாய். அந்த நாயோடு அன்பை பகிரும் நாயகனாக குணாநிதி வாழ்ந்துள்ளார். கிடைக்கும் எல்லாக் காட்சிகளிலும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். அவர் போலவே வினோத், சரத் அப்பானி உள்ளிட்ட முக்கியக் கேரக்டர்கள் அனைவரும் மிகத்தரமாக நடித்துள்ளனர்
இப்படியான படங்களுக்கு இசையும் பாடல்களும் உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டும். இப்படத்தில் இரண்டும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக காளியம்மா பாடல் அசத்தல் ரகம். ஒளிப்பதிவாளர் தனது தனித்திறனை படமெங்கும் காட்டியுள்ளார். நல்ல நல்ல ப்ரேம்களை வைத்து படத்திற்கு ஒரு பாசிட்டிவ் வைப் ஏற்படுத்தியுள்ளார் கேமராமேன்
“சக உயிர்களை நேசிப்பதே வாழ்வின் ஆகப்பெரும் அறம்” என போதிக்கும் படம், கமர்சியல் மீட்டரிலும் சரியாகப் பயணிக்கிறது. சின்னச் சின்ன காட்சிகளிலும் மெனக்கெட்டு உழைத்துள்ளது பட டீம். பெரிதாக எங்குமே தொய்வடையாத திரைக்கதையும், கட்டுக்குலையாத எமோஷ்னலும் படத்தை டீசண்ட் வாட்ச் கேட்டகிரிக்குள் கொண்டு வந்திருப்பதால், இந்த வீக் எண்ட் அலங்கு- வோடு கொண்டாடலாம்
3/5
-வெண்பா தமிழ்