குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கம் தான் குய்கோ
படத்தில் இரு நாயகர்கள் யோகிபாபு& விதார்த். துபாயில் வேலை செய்யும் யோகிபாபு. சென்னைக்குப் போய் ஐபில் மேட்ச் பார்க்க வேண்டும் எனத்துடிக்கும் விதார்த். ஐபில் மேட்ச் பார்ப்பதற்காக ₹1000 ரூபாய் தேவை விதார்த்திற்கு. கிராமத்தில் வாழும் யோகிபாபுவின் தாயார் இறந்துவிடுகிறார். யோகிபாபு அவரின் ஊர்க்காரரான இளவரசுவிடம் தான் வரும்வரையில் தன் அம்மாவை பத்திரமாக ப்ரீசர் பாக்ஸில் வைக்கச் சொல்கிறார். ப்ரீசர் பாக்ஸை அந்தக் கிராமத்தில் கொண்டு வைத்தால் ஐபில் பார்க்கப் போகலாம் என விதார்த்திற்கு டிமாண்ட் வர, அவர் யோகிபாபுவின் கிராமத்திற்குள் செல்கிறார். அதன்பின் நடக்கும் அதகள சம்பவங்கள் தான் படத்தின் கதை
கதையின் போக்கைச் சரியாக உள்வாங்கி ₹1000 வால்ட்ஸ் பிரகாசம் காட்டி நடித்துள்ளார் விதார்த். கணக்கு வாத்தியாராக அவர் கணக்கின்றி காட்டும் சில நல்ல ரியாக்சன்ஸ் படத்தின் பலம். யோகிபாபு தன் பங்கை இரண்டாம்பாதியில் வெகு சிறப்பாகச் செய்துள்ளார். காதலியைக் கண்டு வெட்கப்படும் ஒரு காட்சியில் அல்டிமேட். முத்துமாரி கேரக்டராக வரும் கிராமத்து அழகியும், நாயகி பிரியங்காவும் எதார்த்தம் மாறாத நடிப்பால் வசீகரிக்கிறார்கள். இளவரசு, பண்பழகனாக வரும் வட்டிக்காரர், எஸ்.ஜே, இன்ஸ்பெக்டர் கேரக்டர்கள் என படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கேரக்டர்கள் படமெங்கும் இருக்கிறார்கள்
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நம்மை மலை கிராமத்திற்கு ஒளி பிடித்து அழைத்துச் செல்கிறது. கெவின் மிராண்டா, அந்தோணிதாசன் இருவரின் இசையும் படத்தின் ஜீவனை அடைகாத்து பாதுகாத்துள்ளது. ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்தின் பாசிட்டிவ் அம்சம்
படத்தின் ஆகப்பெரிய பலமாக இயக்குநர் அருண் செழியனின் வசனங்கள் அமைந்துள்ளன. காட்சிகளுக்கு ஏத்த வகையில் சமூக கனெக்டிங் உள்ள வசனங்கள் தூள் பறத்துகின்றன. “ஆடு மேய்க்கிறவரை ஆண்டவர்னு ஏத்துக்கிட்டீங்க..மாடு மேய்க்கிறவரை மாப்பிள்ளையாய் ஏத்துக்க மாட்டீங்களா?”
“அம்மாவிற்குன்னு என்னடா தனி மரியாதை. அம்மான்னாலே மரியாதை தான்” போன்ற வசனங்கள் சாம்பிள். யோகிபாபு வடிவேலு சம்பந்தப்பட்ட ஒரிரு வசனங்கள் படத்தில் வருகின்றன.. அருமை அருமை
இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை சற்று நேரம் திசை மாறினாலும் இறுதியில் விட்ட இடத்திலே வந்து மனதை தொட்டுவிடுகிறது படம்.
குய்கோ- சிரிப்பு+ சிறப்பு
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்