மின்னல் பாயும் வேகத்தில் ஒரு அசுர பாய்ச்சலை நிகழ்த்துகிறது போர்தொழில் படம்
கதையில் ஒருவரியைச் சொல்லிவிட்டு மறுவரிக்குத் தாவினால் கூட முழுக்கதையும் ரிவில் ஆகும்.. ஆக No Story telling
தொடர்ந்து நடைபெறும் தொடர் கொலைகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளும் தான் படம். குற்றமும், காரணமும், தீர்வுமாய் நகரும் படத்தில் நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் கொடிகட்டிப் பறக்கிறது
தன்னை கதைக்குள் முழுமையாய் பொருத்திக் கொண்டுள்ளார் சரத்குமார். இன்றைய தேதியில் இப்படியொரு கேரக்டரைத் தாங்க சரத்குமாரைத் தவிர்த்து வேறு நட்சத்திரம் இல்லை என்று சொல்லுமளவிற்கு அசத்தியுள்ளார். உருவத்தில் சரத்குமரனாக, டாமினேட்டிங் காட்சிகளில் சுப்ரீம் ஸ்டாராக அதகளம் செய்துள்ளார். கதாநாயகன் அந்தஸ்தை ஓரமாக வைத்துவிட்டு களம் அறிந்து தன் கேரக்டருக்குப் பலம் சேர்த்துள்ளார் அசோக்செல்வன்.
நிகிலா விமல் கண்களால் ரசிகர்களை கைது செய்கிறார். அடுத்தப் படத்தில் இன்னும் ஸ்கிரீன்பேஸ் கொடுங்க சார்ஸ். சற்று நேரம் என்றாலும் நச்சென தடம் பதிக்கிறார் நிகிலா விமல். வில்லன்கள் பாத்திரம் ஏற்றுள்ள சில கேரக்டர்கள் வேறமாரி மேனரிசத்தால் கலக்கியுள்ளார்கள்
ஆல்ப்ரெட் பிரகாஷ் விக்னேஷ்ராஜா இருவரும் இணைந்து படத்தில் ஸ்கிரீன் ரைட்டிங் செய்துள்ளனர். படத்தில் தகவல்களும் அடுக்கடுக்காக நகரும் காட்சி அமைப்புகளும், சின்னச் சின்னதாக நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்களும் அல்டிமேட். சரத்குமார் அசோக்செல்வன் படத்தின் இரண்டு ஹீரோக்கள் என்றால் அதற்கு முன்னால் திரைக்குப் பின்னால் ஹீரோக்கள் எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷ் இயக்குநர் விக்னேஷ்ராஜா இருவரும் தான். ஜேக்ஸ் பிஜாய் இசையில் காட்சிகளுக்கு தேவையான அதிர்வு கிடைத்துள்ளது. கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் அத்தனை துல்லியம். இரவுக்காட்சிகளில் அவரது கேமரா பயங்கர விழிப்புணர்வோடு உழைத்துள்ளது
படத்தில் குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கான பின் கதை இரண்டு சொல்லப்பட்டுள்ளது. அந்த இரண்டில் ஒன்று படம் பார்க்கும் போது நம்மை எதோ பண்ணுகிறது. எழுத்தை பேப்பரில் சாதிப்பது எளிது. திரையில் சாத்தியப்படுத்தி சாதிப்பது மிகவும் கடினம். அதை அழகாக அமைத்துள்ளார் இயக்குநர். முன்பாதியில் இருக்கும் பாய்ச்சல் பின்பாதியில் இல்லை என்றாலும் முன்பாதியில் இல்லாத அழுத்தமும் மன நெருக்கமும் பின்பாதியில் கிடைக்கிறது. சரத்குமாருக்கு ஏன் பின்கதை வைக்கவில்லை என்று யோசிக்கும் போதே, ஒரு வசனம் மற்றும் ஒரு மிட்ஷாட் வைத்து அவரது கதையை உணர்த்தும் அந்த லாவகம் இருக்கே…சிறப்பு சிறப்பு
நாம சாதாரணமா நினைக்கக் கூடிய புழுதான் நாம புண் வந்து படுக்கையில் கிடக்கும் போது நம்மை ஒரு கொத்து கொத்தி அதிக துன்பத்திற்கு உள்ளாக்கும். அதேபோல் நாம் மனித எமோஷ்னல்களை எளிதாக நினைக்கக்கூடாது. ஒரு தனி மனிதனின் சிறு வலியோ..வடுவோ இச்சமூகத்தையே ஆட்டிப்படைக்கும். அதனால் உணர்வுக் கொலைகளை தவிர்த்தாலே மனிதக்கொலைகள் குறையும் என்று சொன்ன விதம் போர்தொழில் படத்தை உச்சிமுகர வைக்கிறது
தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே திரையரங்கிற்கு கொண்டு வருவேன் என்ற நேர்தொழிலில் விடாப்பிடியாக நிற்கும் சக்திவேலன் பிலிம் பேக்டரிக்கு இந்தப் போர்தொழில் மேலும் ஒரு வெற்றிப்படம்
போர்தொழில்- On fire
4/5
-மு.ஜெகன் கவிராஜ்
#PorThozhil #போர்தொழில்