கொலையுண்டவர் அப்பாவி என்றால் ok. கொலை செய்தவனும் அப்பாவி என்றால் அப்போது நிஜ குற்றவாளி யார்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அந்தக் கேள்விக்கான பதில்தான் படத்தின் கதை
இந்த உலகிலே மிகவும் மோசமான ஆயுதம் நயவஞ்சகனின் நாக்கு என்பார்கள்..ஒரு நாக்கால் ஒரு தனி மனிதனை மட்டுமல்ல ஒரு நாட்டையே சீர்குலைக்க முடியும். முசோலினி,ஹிட்லர் போன்றோரின் நாக்குகள் வளர்த்த வன்மும் விதைத்த விஷமும் வரலாற்றின் கோரப்பக்கங்கள். அப்படியான ஆட்கள் நம் சமூகத்திலும் இப்போது இருக்கிறார்கள். ஒரு பலவீனமான மனிதனை எப்படி கொலைகாரனாக மாற்றலாம் என்ற ஆராய்ச்சி நடத்தி, அதன் மூலம் க்ரைம் செய்கிறார்கள். யெஸ் இப்படியான அதிர்ச்சிகரமான விசயங்களைப் பேசியிருக்கிறது படம்.
விஜய் ஆண்டனி தனக்கு என்ன நடிப்பு வருமோ அதற்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ரத்தமும் அவருக்கு கை கொடுக்கிறது. மகளுக்கும் அப்பாவிற்குமான சில செண்டிமெண்ட் காட்சிகள் தற்போதுள்ள விஜய் ஆண்டனியின் துயரத்தை நமக்குள் நினைவூட்டி வருத்தமடையச் செய்தது. மகிமா நம்பியாருக்கு இது வாழ்நாள் கேரக்டர். விஜய் ஆண்டனியோடு அவர் சர்வ சாதரணமாகப் பேசும் ஒரு காட்சியில் மிரட்டியுள்ளார். வெல்டன் மகிமா. நந்திதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட படத்தின் கேரக்டர்கள் எல்லாம் கதையோடு பொருந்திப் போகிறார்கள்
கண்ணன் நாராயணின் பின்னணி இசையில் திரைக்கதையின் வேகம் கூடுகிறது. பிரிவுத்துயரை விளக்கும் ஒரு பாடலும் ரிப்பீட் மோட் ரகம். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் நல்ல துல்லியத்தை எட்டியுள்ளார். குதிரை சேஷிங் காட்சியும் க்ளாஸ்கள் பறக்கும் ஒரு சண்டைக்காட்சியும் அவரின் சிறந்த ஒளிப்பதிவுக்கு சாட்சி
சி.எஸ் அமுதன் தன் காமெடி சென்ஸை எங்குமே காட்டாமல் இந்தப்படத்தை முழுக்க முழுக்க சீரியஸோடு அணுகி எழுதியிருக்கிறார். உடன் பயணித்துள்ள எழுத்தாளர் அதிஷாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார். இன்பர்மேட்டிவ் ஆன காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சில காட்சிகள் என்கேஜிங்காகவும் இருப்பது மறுப்பதற்கில்லை. மூளைச் சலவை மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க நாம் என்ன வழியை கண்டடையப் போகிறாம்? என்ற விழிப்புணர்வு சிந்தனையை உருவாக்கிய வகையில் இந்த ரத்தம் முக்கியமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்