மனைவி கனவை நிறைவேற்றும் நம் சினிமா பார்த்துப் பழகிய பழைய கணவனே இந்த ரோமியோ
மலேசியாவில் நன்றாக சம்பாதித்துவிட்டு தென்காசிக்கு வந்திருக்கும் நாயகன் விஜய் ஆண்டனிக்கு 35 வயது. அவர் தனக்கு காதல் வரும் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணுவேன் என்கிறார். தென்காசியில் இருந்து கணினித் துறையில் வேலை செய்வதாக பொய்சொல்லிவிட்டு சினிமாவில் கதாநாயகி ஆகவேண்டும் என முயற்சிக்கிறார் மிருளாளினி. ஒரு சாவு வீட்டில் நடக்கும் இருவருக்குமான திடீர் சந்திப்பு இவர்களின் கல்யாணத்தில் முடிய, மிருளாளினி லட்சியம் நிறைவேறியதா? அதற்கு விஜய் ஆண்டனி செய்யும் தியாகம் என்ன? என்பதாக திரைக்கதை விரிகிறது
அளவை மீறாத நடிப்பை வழங்கியுள்ள விஜய் ஆண்டனி, சற்று மிகைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளிலும் அளவாகவே நடித்துள்ளார். மிருளாளினி தனது கேரக்டரை முழுதுமாக உள்வாங்கி அதை திரையில் அதகளமாக வெளிப்படுத்தியுள்ளார். இளவரசு, விடிவி கணேஷ், நாயகியின் நண்பர்கள் கேங் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
பின்னணி இசை பாடல்கள் இரண்டும் போதுமான ஒத்துழைப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. சில வரைகலை காட்சிகளில் இன்னும் தெளிவிருந்திருக்கலாம். வசனங்கள் இன்னுமே கூர்மையாகவும் தற்போதைய சூழலை உள்வாங்கியும் எழுதப்பட்டிருக்கலாம்
படத்தின் ஆகப்பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டிய ஒரு கதாப்பாத்திரத்தை அட்ஷயப்பாத்திரம் போல் பாதுகாக்காமல் குட்டிப் பாத்திரம் போல் பயன்படுத்திவிட்டனர். படத்தின் மிக முக்கியமான அழுத்தத்தை அது நீர்த்துப் போகச் செய்துவிட்டது. சில துள்ளலான காட்சிகளில் நாயகனிடம் இன்னும் நல்ல நடிப்பை இயக்குநர் வாங்கியிருக்க வேண்டும். நம்பகத்தன்மையற்ற காட்சிகளில் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருந்தால் இந்த ரோமியோ நம்மை கவர்ந்திருப்பார்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்