“வரங்களே சாபங்களாகும் போது தவங்கள் எதற்கு?” என்று அப்துல் ரஹ்மான் ஒரு கவிதை எழுதியிருப்பார். சுழல் வலைத்தொடரின் இரண்டு பாகங்களுக்கும் இந்த வரிகள் சற்றுப் பொருந்தும். கொலைக்கான காரணங்களை கண்டு பிடித்து, அதை சபையேற்றும் கரு தான் சூழல்2-வின் கதையும்
குலசை முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா விழாவோடு சீரிஸின் கதை துவங்குகிறது. மிகச்சிறந்த வக்கீலான லால் சீரிஸின் துவக்கத்திலே கொல்லப்படுகிறார். அவர் ஏன் கொல்லப்பட்டார்? என்று ஹீரோ கதிர் விசாரிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சென்ற பாகத்தில் தனது சித்தாப்பாவை கொன்ற கேஸில் ஆல்ரெடி ஜெயிலில் இருக்கிறார். அவருக்கான தீர்ப்பு? என்ன.. தற்போதைய கதையில் அவர் எப்படிச் சம்பந்தப்படுகிறார் என்பதற்கான பதில்களை எட்டு எபிசோட்களாக சற்று நீ…..ட்டி முழக்கிச் சொல்லியிருக்கிறார்கள்
கதைக்கான பாத்திரங்களாக திரையில் பரிணமித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். கதிரின் விசாரணை வளையம் எழுதப்பட்டதை விட, அவரது நிதானமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் மேற்சொன்ன வரிகள் பொருந்தும். இவ்விருவரைத் தொடர்ந்து ரைட்டிங்கில் ஸ்ட்ராங்காக மின்னும் கேரக்டர்கள், லால், மஞ்சுமா மோகன், மற்றும் எட்டு இளம் பெண்கள் சிறுமிகளாக வரும் சிலர். இவர்கள் ஒட்டுமொத்தமாக நம் கவனத்தை ஈர்த்துக் கொள்கின்றனர். மேலும் நிறைய பெண் கேரக்டர்கள் நம் அட்டென்ஷனை கிரியேட் செய்கிறார்கள் கிரேட்.
சூழல் முதல் பாகத்தில், மசானா கொள்ளை சம்பவங்களின் போது அந்த இசை எப்படி ஒலிக்குமோ அதை அப்படியே நமக்குள் கடத்தியிருந்தார் சாம்.சி.எஸ். அதிலிருந்து ஒருபடி முன்னேறி இந்த சீரிஸில் வெளுத்துக் கட்டியுள்ளார். கதையோடு ஒன்றி வரும் பாடல்களில் இந்தமுறை சிக்ஸ் அடித்துள்ளார். சில்லா சில்லா சில்லாஞ்சி பாடலும், ஒரு சுடலை மாடன் பாடலும் அசத்தல். பின்னணி இசையால் காட்சிகளின் கணத்தை நன்றாக கூட்டியுள்ளார். படத்தில் ஒளிப்பதிவு ஒரு கேரக்டராகவே வருகிறது. தசரா விழாவின் பிரம்மாண்டங்களை கண்முன் நிறுத்திய விதமும், கடல் சார்ந்த காட்சிகளை காட்டிய விதமும் சிறந்த சான்று.
எந்த படைப்பையும் அதற்கு முந்தைய படைப்போடு கம்பேர் செய்யக்கூடாது என்றாலும், இந்த சீசனுக்குள் பழைய கதையும் இருப்பதால் சொல்ல வேண்டியுள்ளது. கதையின் உள்ளடக்கம், கேரக்டர்களின் நியாய, அநியாயங்கள் உள்பட சுழல் ஒன்று நமக்குள் பெரிதாக சுழற்றி அடித்தது. சுழல்-2வும் அதற்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்க வேண்டியதை 20 வார்த்தைகளில் சில இடங்களில் கன்வே செய்துள்ளதால் சற்று நீளமான தொடர் என்ற தோற்றம் ஏற்படுகிறது. சுழல்2 முன் வைக்கும் பிரச்சனை மேற்சொன்ன குறைகளையெல்லாம் நிச்சயமாக நீர்த்துப் போகச் செய்துவிடும். சிறு வயதில் செக்ஸ் அபியூஸ் என்பது, வாழ்நாள் முழுதும் காயப்படுத்தும். அதை மிக நுண்ணியமாக எழுத்தின் மூலம் பதிவு செய்துள்ளது புஷ்கர் காயத்ரி கூட்டணி. “தவறு செய்தால் வதம் செய்ய வேண்டும்” என்பது தெய்வக்கணக்கு என்றாலும், அந்த வதத்தை நல்ல மனம் கொண்டவர்கள் செய்யும் போது ஏற்படும் உளவியல் சிக்கலை, சீரிஸில் உள்ள ஒரு முக்கிய கேரக்டர் மூலம் உணர்த்தி வருவது, இந்த சுழல்2 அறத்தின் பக்கம் நிற்பதற்கான சாட்சி. எட்டுப் பெண் தெய்வங்கள் சூழ்ந்து அரக்கனை வதம் காட்சி ஒன்றை கதையோடு இணைத்து இயக்கிய விதம் அப்ளாஸ் ரகம்
எதிர்பார்ப்பின்றி அமேசான் ப்ரைமில் சுழல்2-வை ஸ்ட்ரீமிங் செய்யுங்கள்.. நிச்சயமாக ஏமாற்றாது
3/5
-வெண்பா தமிழ்