Tamil Movie Ads News and Videos Portal

வணங்கான்- விமர்சனம்

சாதாரண மீன்கடையில் கூட விண்மீன்களைத் தேடும் படைப்பாளி பாலா. அவர் திரையுலகிற்கு வந்த 25-ஆம் ஆண்டில் அவரது வணங்கான் வெளியாகியுள்ளது

ஹீரோ அருண்விஜய். தன் எதிரில் நடக்கும் அநியாயத்தைக் கண்டால், அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பொளந்துவிடுவார். அப்படியான கடுங்கோபக்காரரான அவரை, ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வேலைக்குச் சேர்த்து விடுகிறார் அவரது நண்பர். அங்கும் ஒரு அநியாயம் நிகழ்கிறது. அதன் விளைவாக இரு கொலைகளைச் செய்கிறார் அருண் விஜய். மீண்டும் ஒரு கொலை செய்வேன் எனவும் சொல்கிறார். ஏன் கொலைகள் செய்தார்? செய்யப்போகிறார்? என்ற கேள்விகளுக்கான விடை தான் பாலாவின் வணங்கான்

நடிகர்களிடம் நடிப்பை வாங்குவதில் தானொரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பாலா. அருண் விஜய் படங்களில் நடிப்பளவில் அவர் உச்சம் தொட்டிருப்பது இந்தப்படத்தில் தான். அட்டகாசமாக நடித்துள்ளார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு நிச்சயமாக பிரகாசமான ப்யூச்சர் இருக்கிறது. சிறப்பு. ரிதா கேரக்டரில் வருபவரும் அசத்தியுள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் சிறப்பு வேடங்களில் வந்து சிறப்பு செய்துள்ளனர்

ஜி.வி பிரகாஷ் பாடல்களில் ஜீவனைத் தொட தவறியுள்ளார். சத்தம் குறைவான சாம்.சி.எஸின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. கன்னியாகுமரி புவியியலை குருதேவின் கேமரா அப்படியே அள்ளிக்கொண்டு வந்துள்ளது

பாலாவின் ஹீரோக்கள் பெருங்கோபம் கொண்டிருப்பது எதனால்? என்று கேட்டால், அந்தக் கோபத்திற்குப் பின்னால் ஒரு பெருங்கருணை சிதைக்கப்பட்டிருக்கும். கருணை ஆதிக்கத்தால் கொல்லப்படும் போது, அந்த ஆதிக்கத்தை அழிக்க பாலாவின் ஹீரோக்கள் பெருங்கோபம் கொண்டு எழுவார்கள். பிதாமகன் அப்படித்தான் எழுவான்
இந்த வணங்கானும் கருணை அழித்தொழிப்பை எதிர்க்கிறான். பேரன்பை மட்டுமே மதிக்கிறான். தன் படங்கள் மூலம், அன்பு செய்பவனுக்கு நம்பிக்கையும், தப்பு செய்பவனுக்கு பயத்தையும் ஏற்படுத்தி வருகிறார் பாலா. அது அவருக்கு ஜெயத்தை வழங்கி வருகிறது. இந்த வணங்கானும் ஜெயத்தை வழங்குவான். படத்தில் குறைகளே இல்லையா? என்றால், அதையெல்லாம் படத்தைப் பார்த்தபின்பு பேசலாம். முதலில் படத்தைப் பார்த்துவிடுங்கள்

வணங்கான்- வாழ வேண்டியவன்
3/5
-வெண்பா தமிழ்