தலைமறைவாக வாழும் ஹீரோவுக்கு வரும் பிக்கல்களும் பிடுங்கல்களுமே படத்தின் கதை
சலீம் படத்தின் இறுதிக்காட்சிக்குப் பின் நடப்பதாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மனைவியை இழந்து அந்தமானில் வாழ்கிறார் ஹீரோ விஜய் ஆண்டனி. சலீமில் விஜய் ஆண்டனி அமைச்சர் மகனை கொன்றதால் அமைச்சர் வி.ஆ-ஐ கொலை செய்யத்துடிக்கிறார். ஒருபுறம் அந்தமானிலே ஹீரோவுக்கு ஏழ்ரை வருகிறது. போலீஸ் அதிகாரி சரத்குமார் விஜய் ஆண்டனியை காப்பாற்ற நினைக்கிறார். அந்தமான் தீவைத்தாண்டி ஹீரோ வந்தாரா? அவரை பழி தீர்க்க முயல்பவர்களை அவர் பழி தீர்த்தாரா? என்பதாக படம் விரிகிறது
விஜய் ஆண்டனியின் நடிப்பைப் பற்றி விமர்சனம் எழுதினால் ‘வழக்கம் போல’ என்ற வார்த்தையைச் சேர்க்காமல் எழுத முடியாது. ஏன் என்றால் அவர் வழக்கம் போல் நடிப்பதே தெரியாதது போல நடித்துள்ளார். மேகா ஆகாஷை ஆகா சபாஸ்னு சொல்ல முடியவில்லை. நாசர், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு போதிய அழுத்தம் கதையில் இல்லை
அச்சு மணி விஜய் ஆண்டனி இருவரும் இசை அமைத்துள்ளார்கள். யாரின் இசையை யார் கெடுத்தார் என்று தெரியவில்லை. இருவருமே படத்தில் இசையைச் சரியாக வழங்கவில்லை. இயக்குநர் விஜய் மில்டனை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஈசியாக ஓவர்டேக் செய்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா நிறைய மேஜிக்குகளை நிகழ்த்தியுள்ளது. சபாஸ்!
மழை பிடிக்காத மனிதன் என வித்தியாசமாக டைட்டில் யோசித்த இயக்குநர் கதை திரைக்கதையை வித்தியாசமாக யோசித்திருக்கலாம். அந்தமானில் ஒரு தாதா ஒரு சாதா ஆளைப் போல ஒவ்வொரு ஆட்களையும் போட்டுத்தள்ளுவதெல்லாம் கறடுமுரடு லாஜிக் மீறல். கதையோடு ஒன்ற முடியாத காட்சிகளால் இந்த மழை பிடிக்காத மனிதன் நமக்கு அந்நியப்பட்டு நினைக்கிறான்.
ஹீரோ வசிப்பது சென்னையில். அதனால் அவனுக்கு மழை பிடிக்காது என்று ஒரு காரணம் வைத்திருந்தால் படம் சென்னை ரசிகனுக்காவது கனெக்ட் ஆகியிருக்கும்.
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்